இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாக். ஆதரவு அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்ப பெற்று உள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. அப்போது சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக உலக நாடுகளிடம் பாகிஸ்தான் அரசு கூறியது. இதை நம்பிய கொலம்பிய அரசு, பாகிஸ்தான் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது.

இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான எம்பிக்கள் குழு கொலம்பியா தலைநகர் போகோட்டாவுக்கு சென்றுள்ளது. அந்த நாட்டு வெளியுறவு துறை துணை அமைச்சர் ரோஸா யோலான்டாவை, இந்திய குழுவினர் நேற்று சந்தித்துப் பேசினர். இதன்பிறகு கொலம்பிய அமைச்சர் ரோஸா கூறும்போது, “இந்திய குழுவினர் தெளிவான விளக்கத்தை அளித்தனர். காஷ்மீரின் என்ன நடக்கிறது. அந்த பகுதியின் உண்மையான நிலவரம் என்ன என்பது இப்போது தெளிவாக புரிகிறது” என்று தெரிவித்தார்.

இந்திய எம்பிக்கள் குழுத் தலைவர் சசி தரூர் கூறியதாவது: கொலம்பிய அமைச்சர் ரோஸாவை சந்தித்துப் பேசினோம். எங்களது விளக்கத்தை அவர் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடர்பாக கொலம்பிய அரசு வெளியிட்ட அறிக்கை வாபஸ் பெறப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக கொலம்பிய ராணுவம் தீரமாக போரிட்டு வருகிறது. இதே பாணியை இந்தியாவும் கடைப்பிடிக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாத பிரச்சினையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இதை கொலம்பியாவிடம் எடுத்துரைத்தோம்.

தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்தியா எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுகிறது. இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

இந்திய குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக மூத்த தலைவர் தரண்ஜித் சிங் சாந்து கூறும்போது, “தென்அமெரிக்க நாடான கொலம்பியா, இந்தியாவின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக கொலம்பியா விரைவில் பதவியேற்க இருக்கிறது” என்று தெரிவித்தார்.

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறும்போது, “பாகிஸ்தான் தொடர்பான கொலம்பிய அரசின் முந்தைய அறிக்கை வாபஸ் பெறப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சுற்றுலா பயணிகள் கொல்லப்படுவதற்கும், தீவிரவாதிகள் கொல்லப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இந்தியாவின் விளக்கத்தை கொலம்பியா ஏற்றுக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.