‘இரட்டை முகம் கொண்ட பாகிஸ்தானிடம் எந்த முகத்துடன் நாம் பேசுவது?’ – முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பர்

கோபன்ஹேகன்: இரட்டை முகம் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. நாம் அதில் எந்த முகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானின் நடவடிக்கை தொடர்பாக சர்வதேச அளவில் எடுத்துரைக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட 7 குழுக்களில், பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பேசும்போது, “இந்தியா ஏன் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் கூட அடிக்கடி கேட்கிறார்கள்.

ஆனால், பாகிஸ்தான் இரட்டை முகம் கொண்ட நாடு. நாம் எந்த முகத்துடன் பேசுவது? பாகிஸ்தான் அரசாங்கம் பிளந்த நாக்குடன் பேசுகிறது. நாம் யாருக்கு பதிலளிக்க வேண்டும்?

இந்தியாவில் நீண்டகாலமாக பாகிஸ்தான் அமைதியின்மையைத் தூண்டி வருகிறது. ஒரு பாம்பு ஒருபோதும் அதன் சொந்த விஷத்தால் கொல்லப்படுவதில்லை. பாகிஸ்தான் வளர்க்கும் பயங்கரவாத வலையமைப்புகள் ஆபத்தானவை.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டது. அந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஒரு ஏமாற்று வேலையே தவிர வேறில்லை. அடுத்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் இந்த பேச்சுவார்த்தை காலத்தைப் பயன்படுத்துகிறது.

இந்தியா பேச்சுவார்த்தைகளில் நேரத்தை வீணாக்காது. அதேநேரத்தில், முக்கியமான பிரச்சினைகள் குறித்து நாங்கள் பேசுவோம். குறிப்பாக, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் புரியும் குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைப்பது குறித்தும், ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரை திருப்பி அளிப்பது குறித்தும் நாங்கள் பேசுவோம்.

பாகிஸ்தானை புத்திசாலித்தனத்துடன் செயல்பட வைக்க பிரதமர் மோடி முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், பாகிஸ்தான் “மரபணு கோளாறு” கொண்ட ஒரு நாடு. கொலை மற்றும் பயங்கரவாதம் பாகிஸ்தானின் மரபணுக்களில் உள்ளது. நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு பிரதமர் மோடி ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளார். நாடுகள் தங்கள் அண்டை நாடுகளை மாற்ற முடியாது என்று கூறப்படுவது வழக்கம். ஆனால், “அண்டை நாடுகள் தூரத்தால் அல்ல, அணுகலால் விவரிக்கப்படுகின்றன என்று உலகுக்குக் கூறியவர் பிரதமர் மோடி.” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.