ஐதராபாத்,
72-வது ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டி இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் மே 10-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வந்தனர்.
உலக அழகி போட்டிக்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசும், உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்களும் மேற்கொண்டனர். இந்த போட்டியின் இறுதிச்சுற்று ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் இன்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
இறுதிச்சுற்றில், தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா சாங்ஸ்ரீ வெற்றி பெற்று 2025-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார். இதையடுத்து 2024 உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா, 2025-ம் ஆண்டுக்கான உலக அழகி ஓபல் சுசாட்டாவிற்கு மகுடத்தை சூட்டினார்.