குஜராத் அணிக்கு CSK பரவாயில்லை; GT-க்கு கிடைத்த 'இந்த' பெரிய கெட்ட பெயர்!

IPL 2025: ஐபிஎல் 2025 தொடரில் இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. இனி ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும். தோல்வியடையும் அணிகளுக்கு இனி வாய்ப்பே கிடையாது.  ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தங்களின் முதல் கோப்பையை நோக்கியும், மும்பை இந்தியன்ஸ் 6வது கோப்பையை நோக்கியும் தற்போது ரேஸில் இருக்கின்றன. 

IPL 2025: இன்னும் இரண்டே போட்டிகள்

ஜூன் 1ஆம் தேதி (நாளை) நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் (PBKS vs GT) அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெல்லும் அணியே வரும் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் ஐபிஎல் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்.

IPL 2025: குஜராத்தின் மோசமான தோல்வி

இது ஒருபுறம் இருக்க, லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளை பெற்றிருந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. குவாலிபயர் 1 போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த அணி கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை சந்திக்க, எலிமினேட்டர் போட்டியில் விளையாடும் வாய்ப்பையே பெற்றது. நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் பந்துவீச்சில் பெரியளவில் சொதப்பியதன் காரணமாக 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரில் 4வது இடத்தை இறுதிசெய்து வெளியேறியது. 

IPL 2025: குஜராத் செய்த பெரிய தவறுகள்

229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத் சென்றபோது சாய் சுதர்சன் 80, வாஷிங்டன் சுந்தர் 48, ரூதர்போர்ட் 24, குசால் மெண்டிஸ் 20 ரன்களை சேர்த்தனர். பேட்டிங்கில் கடைசிக் கட்டத்தில் முடித்துக்கொடுக்க வீரர் இல்லை, அனுபவ வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் கோட்ஸியை அதிகம் நம்பியது என பல தவறுகள் குஜராத் பக்கம் இருந்தன.  

ஆனால், குஜராத் நேற்று செய்த பெரிய தவறுகளில் ஒன்று அதிக கேட்ச்களை கோட்டைவிட்டது. ரோஹித் சர்மா கொடுத்த கேட்ச்சை ஃபைன் லெக் திசையில் கோட்ஸி 2வது ஓவரிலேயே தவறவிட்டார். அதன்பின் அடுத்த 3வது ஓவரிலேயே சிராஜ் ஓவரில் மெண்டிஸ் ஒரு கேட்சை தவறவிட்டார். இதற்கு பின் விஸ்வரூபம் எடுத்த ரோஹித் 81 ரன்களை விளாசினார். இதுபோக, சூர்யகுமார் யாதவ் 12வது ஓவரில் கொடுத்த கேட்சையும் குசால் மெண்டிஸ் தவறவிட்டார்.

IPL 2025: அதிக கேட்ச்களை கோட்டை விட்ட குஜராத்

இத்தனை கேட்ச்களை தவறவிட்டால் எப்படி எலிமினேட்டர் போன்ற அதிக அழுத்தம் கொண்ட போட்டியை வெல்ல முடியும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கேள்வியாக உள்ளது. இத்துடன் குஜராத் டைட்டன்ஸ் ஒரு மோசமான சாதனையையும் புரிந்துள்ளது. அதாவது இந்த சீசனில் 10வது இடத்தில் முடித்து மிக மோசமாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸை விட குஜராத் மோசமாக கேட்ச்களை தவறவிட்டுள்ளது. 

அதாவது ஐபிஎல் 2025 தொடரில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணியே குஜராத் டைட்டன்ஸ் அணிதான். 28 கேட்ச்களை தவறவிட்டு இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் 24, ராஜஸ்தான் ராயல்ஸ் 23, சென்னை சூப்பர் கிங்ஸ் 22, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 என முறையே 2வது முதல் 5வது இடத்தை பிடிக்கின்றனர். பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இந்த பட்டியலில் கீழே இருப்பதால்தான் இப்போதும் கோப்பைக்கான ரேஸில் இருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.