சசி தரூர் குழுவின் விளக்கம் ஏற்பு: பாக். ஆதரவு அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

புதுடெல்லி: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் ஏற்பட்ட இறப்புகளைக் கண்டித்து கொலம்பியா வெளியிட்ட தனது அறிக்கையை வாபஸ் பெற்றுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு அளித்த விளக்கத்தை ஏற்று அந்நாடு தனது முடிவை மாற்றியுள்ளது.

பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை தாக்கியது இந்திய ராணுவம்.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் ஏற்பட்ட இறப்புகளுக்கு இரங்கல் தெரிவித்து கொலம்பியா வெளியிட்ட தனது அறிக்கையை வாபஸ் பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் கடுமையான மறுப்பைத் தொடர்ந்து இனி புதிய அறிக்கையை கொலம்பியா வெளியிடும் எனத் தெரிகிறது. கொலம்பியா சென்றுள்ள குழு இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி, ‘பயங்கரவாதிகளும் தங்கள் நாட்டைப் பாதுகாப்பவர்களுக்கும் ஒன்றானவர்கள் இல்லை’ என்று கூறினர்.

இதனையடுத்து பேசிய சசி தரூர், “நாங்கள் கவலை தெரிவித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை அவர்கள் திரும்பப் பெற்றுள்ளதாகவும், இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்கிறார்கள் என்றும் கொலம்பியாவின் துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலண்டா வில்லாவிசென்சியோ மிகவும் கருணையுடன் குறிப்பிட்டார். அதை நாங்கள் உண்மையிலேயே மதிக்கிறோம்.” என்று கூறினார்.

இதனையடுத்து பேசிய கொலம்பியாவின் துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலண்டா வில்லாவிசென்சியோ, “இன்று எங்களுக்குக் தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது. இதன்மூலம் காஷ்மீரில் நடந்த உண்மையான நிலைமை, மோதல் மற்றும் என்ன நடந்தது என்பது குறித்து இப்போது எங்களிடம் உள்ள விரிவான தகவல்களின் மூலம், உரையாடலைத் தொடரவும், என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும் முடியும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளோம்.” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து சசி தரூர் தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக தலைவர் தேஜஸ்வி சூர்யாவும், கொலம்பியா தனது முந்தைய அறிக்கையை திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், தேஜஸ்வி சூர்யா, “சுற்றுலாப் பயணிகள் கொல்லப்படுவதற்கும் பயங்கரவாதிகள் கொல்லப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இருவருக்கும் இடையில் ஒரு சமத்துவத்தை உருவாக்க முடியாது. கொலம்பியா துணை அமைச்சரும் அதிகாரிகளும் எங்கள் வாதங்களை ஏற்றுக்கொண்டனர்.” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.