சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று மற்றும் இணை நோய் பாதிப்புக்குள்ளான இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் சேத்துக்குழி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (25). ஜேசிபி ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார். தமிழரசனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் தமிழரசனுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் உடல் நிலை மோசமடைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவ பணிகள் (பொது சுகாதாரம்) இணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறும்போது, உயிரிழந்த தமிழரசனுக்கு சிறுநீரக கோளாறு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு இணை நோய்கள் இருந்தன. இதுசம்பந்தமாக பரிசோதனை செய்தபோது, தமிழரசனுக்கு கரோனா தொற்று பாதிப்பும் இருப்பது தெரியவந்தது. வீரியம் குறைந்த கரோனா தொற்று பாதிப்பு என்பதால், தமிழரசன் இணை நோய் காரணமாகவே உயிரிழந்துள்ளார். பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, என்றார்.