தமிழக பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டுவதா? – அன்புமணி கண்டனம்

சென்னை: பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 50%-க்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் 30% பணியிடங்களை இட ஒதுக்கீடு இல்லாமல் தற்காலிக அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் சமூகநீதியை சவக்குழியில் போட்டு புதைப்பதற்கு ஒப்பானதாகும். இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற பல்கலைக்கழக பதிவாளர்கள் கூட்டத்தில் , பல்கலைக்கழகங்களின் மொத்தப் பணியிடங்களில் 10% பணியிடங்கள் ஓய்வுபெற்ற பேராசிரியர்களையும், 10% பணியிடங்கள் தொழில்துறையினரையும், 10% பணியிடங்கள் வெளிநாட்டு ஆசிரியர்களைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி அறிவுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது மிகவும் தவறான, பிற்போக்கான முடிவு ஆகும்.

பல்கலைக்கழக பேராசிரியர்களை நிரந்தரமாக நியமிக்காமல் ஓய்வு பெற்றவர்களையும், தொழில்துறையினரையும் நியமிக்கும் போது முனைவர் பட்டம் வரை படித்து, தகுதித் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படும். பேராசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கும் போது அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது. இந்த இரண்டுமே சமூகநீதிக்கு எதிரான செயல்கள் ஆகும். ஒருபுறம் சமூகநீதி என்று பேசிக் கொண்டு இன்னொருபுறம் சமூகநீதிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் திராவிட மாடல் அரசின் முகத்திரை கிழிந்து விட்டது.

மத்திய அரசின் இணைச் செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அல்லாத, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் வல்லுனர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்த போது அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து திமுகவும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தது. ஒரு கட்டத்தின் மத்திய அரசு அதன் முடிவைக் கைவிட்டது. அப்போது மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதற்கான காரணம் அந்த நடைமுறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது என்பது தான்.

சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசின் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவித்தாரோ, அதே தவறை இப்போது அவரே செய்கிறார். மத்திய அரசே எதிர்ப்புக்கு அஞ்சி கைவிட்ட சமூகநீதிக்கு எதிரான முடிவை, இப்போது சமூகநீதி பேசும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திணிக்கிறது என்றால் அதன் இரட்டை வேடத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் வழக்கம் தீவிரமடைந்திருக்கிறது. இப்போது பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் நியமனத்திலும் சமூக அநீதி தொடர அனுமதிக்க முடியாது. எனவே, பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோரை தற்காலிக அடிப்படையில் நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக,

பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.