துஷான்பே: நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
தஜிகிஸ்தானின் துஷான்பேயில் நடைபெற்ற பனிப்பாறைகள் குறித்த முதல் ஐ.நா.மாநாட்டின் முழுமையான அமர்வில் உரையாற்றிய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பயங்கரவாதத்தின் மூலம் ஒப்பந்தத்தை மீறுவது பாகிஸ்தான்தான் என்று குற்றம்சாட்டினார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர், “இந்த மன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கும், மன்றத்தின் எல்லைக்குள் வராத பிரச்சினைகள் குறித்து தேவையற்ற குறிப்புகளைக் கொண்டுவருவதற்கும் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை கண்டு நாங்கள் திகைக்கிறோம். அத்தகைய முயற்சியை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து சூழ்நிலைகளில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மாற்றங்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மக்கள்தொகை மாற்றங்கள், காலநிலை மாற்றம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் ஆகியவை அடங்கும். எனவே, ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின் முன்னுரையில், இது நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. நல்லெண்ணத்துடன் ஒப்பந்தத்தை மதிப்பது அவசியம். ஆனால், பாகிஸ்தானின் இடைவிடாத எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஒப்பந்தத்தை அதன் விதிகளின்படி பயன்படுத்திக் கொள்ளும் திறனில் தலையிடுகிறது. ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், ஒப்பந்தத்தை மீறியதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.
முன்னதாக, இந்த மாநாட்டில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “சிந்து நதி நீர் பங்கீட்டை நிர்வகிக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்ற இந்தியாவின் ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோதமான முடிவு மிகவும் வருந்தத்தக்கது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக லட்சக்கணக்கான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துவதன் மூலம் இந்தியா சிவப்புக் கோட்டைக் கடக்க பாகிஸ்தான் அனுமதிக்காது” என்று கூறி இருந்தார்.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. 1960-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துகளின்படி சிந்து நதி நீர் பகிர்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது நினைவுகூரத்தக்கது.
இன்று (சனிக்கிழமை) முடிவடையும் பனிப்பாறைகள் குறித்த மூன்று நாள் ஐ.நா. மாநாடு, உலகளாவிய சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதிலும் நீர் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதிலும் பனிப்பாறைகளின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 80 ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் 70 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.