புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய லஷ்கர் கமாண்டர் சைஃபுல்லா கசூரி லாகூரில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர்- இ- தொய்பா கமாண்டர் சைஃபுல்லா கசூரி என குற்றம் சாட்டப்பட்டது.
லஷ்கர் அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத் உத்தரவின் பேரில் கசூரி, ஹபிஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் அமைப்பின் ஷேக் சாஜத் ஆகியோர் பயிற்சிபெற்ற தீவிரவாதிகளை பஹல்காமுக்கு அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்க முதலில் கசூரி மறுத்தார்.
ஆனால், தற்போது லஷ்கர் அமைப்பினர் பாகிஸ்தானில் பொதுக்கூட்டங்களை நடத்தி காஷ்மீரில் ஜிஹாத் நடவடிக்கைக்கு நிதி திரட்டி வருகின்றனர். இவர்களுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், ஐஎஸ்ஐ அதிகாரிகள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் லாகூரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சைஃபுல்லா கசூரி, தல்ஷா சயீத் ஆகியோர் பங்கேற்று பேசினார். அப்போது சைஃபுல்லா கசூரி கூறியதாவது:
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் என் மீது குற்றம் சுமத்தியபின் நான் மிகவும் பிரபலம் அடைந்து விட்டேன். தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால், குண்டுகள் பாயும் என இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார். நாங்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு பயந்தவர்கள் என மோடி தவறாக நினைக்கிறார்.
இந்தியா மீதான சமீபத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் சைபர் குழு சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் ரயில்வே துறை உட்பட முக்கிய கட்டமைப்புகளின் தொலை தொடர்பை முடக்கியது. அவர்களுக்கு பாராட்டுகள். வரும் தேர்தலில் மக்கள் எனக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு சைஃபுல்லா கசூரி கூறினார்.