கெச்,
பாகிஸ்தானின் ஆட்சிக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில், வெவ்வேறு இடங்களில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம் என பலூச் தேசிய இயக்கத்தின் மனித உரிமைகள் அமைப்பான பாங் தெரிவித்து உள்ளது.
அவர்கள் கெச் மற்றும் ஆவாரன் மாவட்டங்களில் சட்டவிரோத வகையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் யாசிர் என்ற தினக்கூலி வேலையில் ஈடுபட்டு வந்தவரை ராணுவ ஆதரவு பெற்ற படையினர் சுட்டு கொன்றனர். இதனை தொடர்ந்து, தர்மன் பலூச் என்பவர் முதலில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
எனினும், மீண்டும் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர், அவருடைய உடலே மீட்கப்பட்டது. இவர்கள் இருவர் தவிர, முசாபிர் பலூச் (வாகன ஓட்டுநர்), நிசார் பலூச் மற்றும் அப்துல் அஜீஸ் ஆகிய 3 பேரும் ஆவாரன் பகுதியில் ராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டபோது சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவங்கள் பற்றி ஐ.நா. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு மற்றும் ஜனநாயக அரசாங்கங்கள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாங் வேண்டுகோள் விடுத்துள்ளது. பலூசிஸ்தானில் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானை பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளது.