ஆபரேஷன் சிந்தூர் இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அடையாளம் காணப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

சென்னை: பாகிஸ்தான் தீவிரவாதத்தின் பக்கம் நிற்பது என்பது நீண்டகாலமாக தொடர்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சிட்டிசன் கூட்டமைப்பு சார்பில் ‘போர்க்களம் முதல் சாதூர்யம் வரை – ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதில் துணிச்சல், தேசிய பாதுகாப்பு, தூதரக ரீதியிலான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: சுதந்திர போராட்டத்துக்கு பிறகு படைகளை அனுப்பி காஷ்மீரை ஆக்கிரமித்தது, அதைத்தொடர்ந்து கார்கில் போர், நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதல் என இந்தியா மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இவ்வாறு பாகிஸ்தான் பகிரங்கமாக தீவிரவாதத்தின் பக்கம் நிற்பது நீண்டகாலமாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது நடத்தப்பட்டிருக்கும் பஹல்காம் தாக்குதலுக்கு, பிரதமர் நரேந்திர மோடியில் தலைமையின்கீழ் முப்படைகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தக்க பதிலடி கொடுத்திருக்கின்றனர். அந்தவகையில் ஆபரேஷன் சிந்தூருக்கு வித்திட்ட முப்படையினர், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்த வேண்டியது நமது கடமை. ஆப்பரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கையை மேற்கொள்வது என்பது 15 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமில்லை.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஆபரேஷன் சிந்தூரை நம்மால் வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது. ஆபரேஷன் சிந்தூர் இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அடையாளம் காணப்படும். 100 ஆண்டுகளுக்கு பின்பும் கூட இந்த ஆபரேஷன் சிந்தூர் மக்களிடையே நினைவுகூரப்படும். இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்வில் இந்திய விமான படையின் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் எம்.மாதேஸ்வரன், புவிசார் அரசியல் நிபுணரும், ஓய்வுபெற்ற ராணுவ கர்னலுமான ஜான் பிரின்ஸ், சென்னை சிட்டிசன் கூட்டமைப்பின் தலைவர் கே.டி.ராகவன், செயலாளர் காயத்திரி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.