தமிழ்க்கவிதை வரலாற்றின் திசையை மாற்றிப் புதிய கவிதைகள் புத்துணர்ச்சியோடும் உயிர்ப்போடும் உருமாறுவதற்குக் காரணமாகத் திகழ்ந்த வால்ட் விட்மன் ஓர் கவிதைக்காடு. பாரதியின் எண்ணவோட்டத்திற்கு விதையாகவும் உரமாகவும் விளங்கியவர்; எதையும் ஒரு கட்டமைப்பிற்குள் அடைத்து வைக்க விரும்பாத கவிஞர். பாரம்பரியக் கவிதையின் கண்பட்டை வழிமுறைகளுக்கு மாற்றான, சுதந்திரக் கவிதைகளால், உணர்வுகளுக்கு புதிய சுருதியை அளித்தவர். அவருடைய புல்லின் இதழ்கள் என்னை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தது. சாதாரண தனிமனிதனின் குரலும், தேசத்தின் தேடலும் இணைய, கவிதை என்பது வடிவக் கட்டுப்பாடுகளுக்குள் இல்லை; அதன் உட்பொருளிலேயே பொதிந்திருக்கிறது என்பதை அறியவைத்தவர்.

நான் சிறுமியாக இருந்தபோது என்னுடைய அப்பா, பழமொழிகள், சிறுகதைகள், கவிதைகளென அருகில் நாற்காலியில் அமரவைத்து எதையேனும் பேசிக்கொண்டேயிருப்பார். அவர் பேசத் தொடங்கியதும் தப்பிக்க வழியைத் தேடி, பின்வாசல் வழியாகச் சுவரேறிக் குதித்துப் பக்கத்து வீடுகளுக்கு ஓடிவிடுவோம், அல்லது மொட்டை மாடிக்குச் சென்று மறைந்து கொள்வோம். ஆனாலும் விடாமல் பிடித்து உட்கார வைத்துவிடுவார். ராமர் நீலம் பூசிய சாயம் போன சுவற்றில் பறந்து கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சிகளையும் கிளிகளையும் பார்த்தபடியே நானும் அமர்ந்திருப்பேன். கொஞ்சம் காதில் விழும், கொஞ்சம் காற்றில் விழும். அங்கிருந்த புத்தக அலமாரியில் யாரும் தொட்டுப் பார்க்காமலிருந்த பழுப்பு நிற விட்மனின் நூலொன்று எதார்த்தமாக என் விழிகளில் விழுந்தது. முதன்முறையாக அதைத் தட்டியெடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் அதேயிடத்தில் வைத்துவிட்டேன். அச்சமயம் ஞாயிறு மலரில் வெளியான விட்மன் பற்றிய குறிப்பினை நறுக்கி, வால்போல் நீண்டச் செய்தித்தாளை அப்பா என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னபோது, அறியாத வயதில் பெயர் மட்டும் மனத்தில் பதிந்துபோனது.
விட்மனின் கவிதானுபவம் என்பது சொற்களைவிட உயர்வானது. சொல் புதிது, பொருள் புதிது என்ற பாரதியின் உன்னத வரி விட்மன் அவருக்குக் கொடுத்த உத்வேகத்தில் கூடப் பிறந்திருக்கலாம். புதிய நடை, புரியாத நடை என்றெல்லாம் கருத்துகள் உலவியபோதும், புதிய கவிதைகளுக்கான அத்தனைச் சாத்தியங்களையும் கையிலெடுத்திருக்கிறார். வசனக்கவிதை வடிவம் ஆரம்பத்தில் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் பிறகு பலரும் அவரது நடையைப் பின்பற்றத் தொடங்கினர். வாழ்வை முழுமையாகக் காண்பதும் உணர்வதும் கொண்டாடுவதுமாக நல்ல கவிதை ஒரு சுதந்திர ஊர்வலமாயிருக்க வேண்டுமென, விட்மன் சொல்வதாலேயே எனக்குள் உயிர்த்துடிப்பும், ஏக்கமோடிய குரலும் கவிதையின் பக்கம் நகர்த்துகிறது.

நெருதாவும் வசன கவிதை வடிவத்தையே கையாண்டிருக்கிறார். நெடுந்தொடர்க் கவிதைகள், நீண்ட வாக்கிய அமைப்புகள் இருவரின் கவிதைகளிலும் உண்டு. இருவருமே மனித உணர்வுகளை, நீள் கவிதைகளாகப் பிளந்தும் விரித்தும் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். ‘நான் என்னைக் கொண்டாடுகிறேன்’ என்ற பாடலைப்போல் நெருடாவும் பாடல்கள் போன்ற கவிதைகளை எழுதியுள்ளனர்.
மரணம் என்பது முடிவல்ல; இயற்கைக்குத் திரும்புவது. மண்ணோடு கலந்து, புல்லாக வளர்ந்து இயற்கையோடு இயைந்துப் போவது. இறந்தவரை நேரடியாகப் பார்க்க முடியாதென்றாலும், மரணித்த பின்னும் வேறொரு வஸ்துவாகவோ உயிராகவோ இருக்கக்கூடும். காண முடியாவிட்டால், தேடுவதை விட்டுவிட வேண்டாம். உங்களுக்குத் தேவைப்படும்போது தேடுங்களென்று சொல்லும் Song of Myself கவிதையில் வரும் வரிகள்.
நான் என்னையே கொண்டாடுகிறேன்
நான் நினைப்பதை நீங்களும் நினைக்கலாம்
என்னுடைய ஒவ்வொரு அணுவும் உங்களுக்கானது
……
புல்லிலிருந்து வளர என்னையே மண்ணுக்குத் தருகிறேன்
உங்கள் காலணிகளுக்கு அடியில் என்னைத் தேடுங்கள்
நீங்கள் அரிதாகவே உணர்வீர்கள்
நான் யார், என்ன சொல்கிறேனென்று
ஆனாலும் உங்களுக்காகச் சுகமாக இருப்பேன்
உங்களுடைய ரத்தத்தை நார்ச்சத்தாக மாற்றுவேன்
முதலில் என்னைத் தவறவிட்டாலும்
மீண்டும் அழைத்து உற்சாகப்படுத்துங்கள்
என்னை ஓரிடத்தில் தவறவிட்டால்
வேறொரு இடத்தில் தேடுங்கள்
நான் எங்காவது நின்றுகொண்டு
உங்களுக்காகக் காத்திருப்பேன்
இயற்கையை ஓர் உயிர்ப் பொருளாகக் கண்டவர் விட்மன். மக்களாட்சியைப் பற்றி, சாதாரண மனிதர்களின் வாழ்வியலை, அவர்களின் உணர்வுகளைத் தெளிவாகப் பதிவு செய்தாலும், இயற்கையே தனக்கான பலத்தைத் தருகிறது என்கிறார். மனிதன் ஏதோவொரு வகையில் பலவீனமாக இருந்தாலும் இயற்கை அவனுக்கு வலிமையைக் கொடுக்கிறது.

நாம் எங்குச் சென்றாலும் சுத்தமான காற்று நம்மோடு வந்துகொண்டிருக்கிறது. எங்கும் எதிலுமிருக்கும் தென்றலை யாரும் எடுத்துக்கொண்டு ஓடிவிட முடியாது. ‘என்னைப் பொருத்தவரையில் எல்லா உயிர்களும் இயற்கையோடு பிணைந்த வாழ்வியலையே கொண்டுள்ளன. இயற்கை நம்முடைய மனநிலைக்கேற்பச் சோர்ந்திருந்தால் சோர்வாகவும், உற்சாகமாகயிருந்தால் உற்சாகத்துடனும் இருக்கிறது. இயற்கை தொடர்பான உந்துதல், அழகியலை மேம்படுத்துகின்றன. அது தன்னிடமிருந்து ஒரு சிறுபகுதியை நமக்குத் தருகிறது. அதன் சுவாசத்தை உணர, இசையை அனுபவிக்கச் சொல்லிக்கொடுக்கிறது. இறுதியில் நாம் கால்பதிக்கக்கூடிய ஒரே பாதை இயற்கை மட்டுமே. காடு, மலை, கடல், நட்சத்திரம், நிலவு, நதியென இயற்கையின் அத்தனை பரிமாணங்களும் நம்மை உத்வேகப்படுத்துகின்றன’ என்கிறார்.
வசந்த காலத்து நிலம்
நகரங்களுக்கு நடுவில்
சந்துகளுக்கு மத்தியில்
பழைய காடுகளைக் கடந்து
வயலட் பூக்கள் தரையை எட்டிப்பார்க்க
சாம்பல் நிறக் குப்பைகள் கிடக்கின்றன
வயல்களில் புற்களின் நடுவில்
சந்துகளின் ஒவ்வொரு பக்கத்திலும்
எல்லையற்றப் புற்களைத் தாண்டி,
மஞ்சள் நிறக் கோதுமையைக் கடந்து
அரக்கு நிற வயல்களில்
அதன் போர்வையிலிருந்து
ஒவ்வொரு தானியமாக எழுகிறது,
பழத்தோட்டங்களில்
வெள்ளை , இளஞ்சிவப்பு நிற
ஆப்பிள் மரங்களைக் கடந்து
ஒரு சடலத்தைக் கல்லறைக்கு
எடுத்துச் செல்வதற்காக
இரவும் பகலும் சவப்பெட்டிகள் பயணிக்கின்றன
கவிதையின் பாடுபொருள் புறவய உலகைக் கலைத்துக் கொண்டே நகர்ந்துச் சென்று கவிதையை, மையத்தை நோக்கி இழுக்கிறது. வசந்தகாலத்தின் பேரழகையும், நகர்ப்புற கிராமப்புற வாழ்க்கையின் மாறுபாடுகளையும் வர்ணிக்கிறது. ஆப்பிள் மரங்கள் புது வாழ்க்கையைக் குறிக்க, சவப்பெட்டிகள் உயிரின் முடிவைச் சொல்கின்றன. இயற்கையோடு உயிர்ப்புடன் வாழ்தலையும், இறப்பையும் பிரதான அக்கறையாகக் கொண்ட கவிதையாகப் பார்க்கிறேன்.

இரவின் கடற்கரையில்,
ஒரு குழந்தை, தன் தந்தையுடன் நிற்கிறது,
கிழக்கைப் பார்க்கிறது
இலையுதிர் கால வானம்.
‘இரவின் கடற்கரையில்’ என்ற நீள்கவிதையில், பசி நிறைந்த மேகங்கள், புதையுண்ட கருமேகங்கள் கூட்டமாக விரிய விட்மன், இருளின் வழியாகப் இப்பிரபஞ்சத்தைப் பார்க்கிறார்.
இருட்டு பயத்தைக் கிளறிவிடும் களமாகயிருக்கிறது. அதை அனுபவிக்க முடியாமல் கதவுக்குள் அடைந்து வாழ்வதற்குப் பழகியிருக்கிறோம். இரவின் ரம்மியத்தை, இரண்டாயிரத்துக்குப் பிந்தைய நவீன சுகவாதிகள் அனுபவித்து வரும் போக்குகளைக் கவனிக்கையில் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. ஆனால் விட்மன் இரவைக் காதலித்திருக்கிறார். புயலுக்குப் பிந்தைய நட்சத்திரங்கள் திரும்பி வரும்’ என்ற தந்தையின் உறுதிமொழியோடு நம்பிக்கையையும் அன்பின் நீடித்த சக்தியையும் குறிப்பதாகக் கவிதை நீள்கிறது. “நான் அமெரிக்காப் பாடுவதைக் கேட்கிறேன்” கவிதையில்
நான் அமெரிக்காப் பாடுவதைக் கேட்கிறேன்
பல்வேறு கேரல் பாடல்களைக் கேட்கிறேன்
அவை தொழிலாளர்களின் பாடல்கள்
ஒவ்வொருவரும் தனது பாடலைப் பாடுகிறார்கள்
மகிழ்வோடும் வலிமையோடும் பாடுகிறார்கள்
மரவேலை செய்பவன்
அளக்கும்போது பலகையையும்
தூணையும் சேர்த்தே பாடுகிறான்
கட்டடவேலைச் செய்பவன்
வேலைக்குத் தயாராகும்போதும்
வேலை முடிந்து வரும்போதும்
தனது பாடலைப் பாடுகிறான்
படகை ஓட்டுபவன்
படகில் தனக்குச்
சொந்தமானதைப் பாடுகிறான்
தள உதவியாளன்
நீராவிப் படகைப் பாடுகிறான்
செருப்புகளைத் தைப்பவன்
பலகையில் உட்கார்ந்தபடியே பாடுகிறான்
தொப்பி விற்பவன்
நின்றுகொண்டே பாடுகிறான்
கால்நடைகளை ஓட்டுபவன்
மரம் வெட்டுகிறவர்களைப் பற்றி
காலை, மதியம், அந்தி சாயும் வேளைகளில்
பாடிக்கொண்டே தனது
பாதையில் சென்றுகொண்டிருக்கிறான்
அழகாகப் பாடும் அம்மாவும்
இளம் மனைவியும்
வேலைகளைச் செய்கையில்
துணிகளைத் தைக்கையில்
துணைகளைத் துவைக்கையில்
தனக்குத் தெரிந்ததைப் பாடுகிறார்கள்
அது வேறு யாருக்காகவுமில்லை
பகற்பொழுது அதற்கே உரியது
இரவு விருந்துகளில் இளையர்கள்
வாய்த்திறந்து வலிமையுடன், நட்புடன்
மெல்லிசைப் பாடல்களைப் பாடுகிறார்கள்

என அமெரிக்காவில் பணிபுரியும் சாதாரண மக்கள் பாடும் பாடல்களைக் கொண்டாடுகிறது இக்கவிதை. இக்கவிதையைச் சிந்தித்த மனம், செய்யும் தொழிலில் இருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாட்டமாகப் பாடமுடிவதை எடுத்துக்காட்டுகிறது.
அதிகாரத்தில் இருக்கும் வலியவர்கள் ஆனந்தமாகப் பாட முடிவதில்லை, கலையின் ஒட்டு மொத்தப் பயனும் எளியவர்களை அடைவதுதானே. வாய்மொழிப் பாட்டுகள் அதன் இயங்குதன்மையில் அலாதியான இன்பம் உள்ளது. அவற்றைச் செவிமடுக்கும்போது இனிமையும் இயல்பும் நல்லனுபவத்தைத் தருகின்றன. அதனாலே இக்கவிதை அமெரிக்காவில் புதிய உற்சாகத்துக்குக் காரணமாகியது.
வால்டர் எனும் தந்தையின் பெயரிலிருந்து வால்ட் என்ற பெயரை வைத்துக்கொண்டவர். செவன் லாங் லேண்ட் பள்ளியில் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் குறைவான ஊதியத்தில், அதற்கான உரிய மரியாதையும், தனியுரிமையும் இல்லாமல் பல அவமானங்களையும் அடைந்தவர். செய்தித் தாள் நிறுவனத்தில் பணியைத் தொடங்கி பின்னர், நகர வாழ்க்கையின் மீது தீராத மோகம் கொண்ட இவரது கவிதைகள் பல்வேறு திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாரதி, விட்மனை ‘மகான்’ என்று குறிப்பிடுகிறார். அவரைப் பற்றிய கவிதை ஒன்றில் அமெரிக்க வீதிகளில் ஆண்களைப் போல் பெண்களும் நடந்து செல்கிறார்கள்; ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகரான இடமிருக்கிறதெனக் குறிப்பிடுகிறார். பாரதியின் பார்வையை மாற்றியமைத்த புல்லின் இதழ்கள் நூலில் கடற்கரை, மலை, மிதக்கும் மேகம், பெருக்கெடுக்கும் ஆறு, புயல், மின்னல், தாகம், சுதந்திரம், காதல், மோகம் எல்லாமே அதீதமாக இருக்கின்றன. நூல் உருவாகியபோது ஏற்பட்ட அனுபவத்தைக் குறிப்பிடும் போது, ‘ஒரு நூலை உருவாக்குவது பற்றிய புரிதல் புத்திசாலிகளுக்குக் கூடத் தெரிவதில்லை. கவலை, பதற்றத்துடன் கூடிய கடின உழைப்பு, அமைதியின்மை என அத்தனையும் ஆட்டிப் படைத்தாலும் இறுதியில் அவை ஒன்றுமேயில்லாததாகின்றன. என்னிடம் கோடாரி இல்லை, சொல்வதற்குத் தத்துவம் இல்லை, விளக்குவதற்குக் கோட்பாடில்லை. நான் எழுதியவை அனைத்தும் அமெரிக்காவைப் பற்றியவை’ என்கிறார். அக்காலத்தில் அமெரிக்கக் கவிஞர்களிடையே யாப்பினை விடுவித்து இலக்கணத்தையும் வரையறைகளையும் உடைத்து எளிய மக்களுக்கான கலைத்தேவை எது என்பதை உணர்த்தியவர்.
‘நான் ஆண்டாண்டு காலமாக நடந்து வந்த ஒரு பாதையை உடைத்துவிட்டேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன், இன்னொரு பாதையில், மேன்மையான புதிய பயணத்தைச் சுட்டிக்காட்டினேன். அந்தச் சாலையில் யாரும் நடக்கவில்லை” என உரையாடல் ஒன்றில் குறிப்பிடுகிறார். இன்று அந்தப் பாதை நீண்டு விரிந்து சென்றுக்கொண்டிருக்கிறது. உண்மையில் எத்தனை புதிய பாதைகளை வகுத்தாலும் பழைய பூமி இன்னும் மாறாமல் சுழல்கிறது.
மனிதர்களிடம் மிகப்பெரிய குணமிருக்கிறது; அது மென்மையாகத் தோன்றினாலும் மிருகத்தனமானது. தன்னை வெளிப்படுத்திக்கொள்வதற்காக யாரையாவது தூண்டிக்கொண்டே இருக்கிறது.

வாழ்க்கை ஒரு மடிந்த இலையைப்போல் விழுந்து கிடக்கிறது. பெரும்பாலும் நம்மைக் கவனிப்பதைவிடக் குடும்பத்தை அதிகம் கவனிக்கிறோம். நீ உன்னை முதலில் கவனித்துக்கொள் என்று முதன்முறையாக என் தோழி சொன்னபோதுதான் நான் என்னைக் கவனித்தேன். சரியான நேரத்தில், சரியான நபர் நம்மோடு சேர்ந்து நடந்து வரும்போதுதான் நமக்கான இலை துளிர்க்கிறது. ‘காதல் என்பதும் இலையாக, தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும், அதற்குக் கங்காணிகள், பாதுகாவலர்கள் தேவையில்லை’ என்று விட்மன் சொன்னது உண்மைதான். யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் போல் தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்து விடுவதன்மூலமே பெருந்துயரங்கள் மறைந்துபோகின்றன.
ஆக, நேரடியான வசன மொழி நடையில் அழகியலோடும் சொற்களில் சுவாரசியத்தையும் கூட்டி, கவிதையின் ரசனையை வேறொரு தளத்திற்கு நகர்த்துவது சாத்தியமென்று நிகழ்த்திக் காட்டியதில் விட்மனுக்குப் பெரும்பங்குண்டு. இறுதிக் காலத்தில் கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுத் தனது சகோதரரின் வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவரது கவிதைகள் அமெரிக்க வாசகர்களிடமிருந்து பிரபலமான கவனத்தைப் பெறத் தவறியபோதிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர் . அவர் இருந்தபோது கவிதைகளை மதிக்காத சமூகம் மறைந்தபின், அவரைத் தேசிய கவியாகக் கொண்டாடியது.
சத்தமின்றிப் பொறுமையோடிருக்கும் சிலந்தியைப் பற்றிய விட்மனின் இன்னொரு கவிதை நெஞ்சைக் கனக்கும் அனுபவத்தை அளிக்கிறது. மெளனமான, பொறுமையான சிலந்தி, தனியாக ஒரு பாறைக்குன்றின் விளிம்பில் நின்று, கால வெளிக்குள் வலையினை வீசும் அந்தக் கணம், எத்தனை முறை நானும் மனத்திலிருந்து வார்த்தைகளை வலையாக வீச முயன்று அதில் தோற்றுப்போய் மீண்டும் மீண்டும் வீசிக்கொண்டிருக்கிறேனோ அதைப்போல் என் எழுத்துகளும் என் இதயமும் தேடலுக்கான அர்த்தத்தை உருவாக்க முயன்றன. பெரும்பான்மையான நேரங்களில் அந்தரங்கமான தனிமை, தொடரும் முயற்சியினூடாக துக்கமும் நம்பிக்கையும் கலந்து என்னை ஆட்கொள்கின்றன. உணர்வுகளைப் போர்த்திக்கொண்டு தன் வழியைக் கண்டுபிடிக்க முயன்று, அறிதல் வலையைச் சத்தமின்றி வீசி, பொறுமை காக்கும் அகச்சிலந்தியாக இக்கவிதைக்குள் நம்மையே பார்த்துக்கொள்ளலாம்.

‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்’ என்பது பாரதியின் கூற்று. ‘என் கவிதையை நான் சொல்ல வேண்டும், அது என் வேலை, அது எனக்குத் தொழில்’ என்று முதலில் சொன்னது வால்ட் விட்மன் தான். ‘நான் கவிதைக்காக நிற்கிறேன். எனது கவிதைகள் வெள்ளையருக்கும் ஐரோப்பியருக்கும் மட்டுமல்ல, இந்த ஒரு பூமிக்கானதும் மட்டுமல்ல, வேறேதேனும் பூமியிருந்தால் அதற்குமானது’ என்ற விட்மனின் வரிகள் இந்நிலமெங்கும் ஊடுருவிக் கிடக்கின்றன.
– சொற்கள் மிதக்கும்!