டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தும், 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. சிரியா நாட்டின் எல்லையையொட்டி லெபனான் நாடு அமைந்து உள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக லெபனானில் இருந்தும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்பின்ன போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், சிரியாவில் இருந்தும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிரியாவின் லடாகியா பகுதியில் உள்ள ஏவுகணை கிடங்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (ஐ.டி.எப்.) திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளன. மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்த இடத்தில் நடந்த இந்த தாக்குதலில், ஒருவர் பலியாகி உள்ளார் என கூறப்படுகிறது.
சர்வதேச நாடுகள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க கூடிய ஏவுகணைகள் இந்த கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது. நிலப்பரப்பில் இருந்து வான்வெளியில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் இருந்துள்ளன.
இந்த பகுதியில், சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து தன்னுடைய வேலையை செய்யும். இஸ்ரேலுக்கும் அதன் குடிமக்களுக்கும் ஏற்பட கூடிய எந்தவித அச்சுறுத்தலையும் ஒழிப்பதற்கான பணியில் இஸ்ரேல் ஈடுபடும் என அதுபற்றி இஸ்ரேல் படைகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.