துபாய்,
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.
ஏனெனில் அந்த அணியில் வேகப்பந்துவீச்சு துறை தென் ஆப்பிரிக்காவை விட வலுவானதாக உள்ளது. இருப்பினும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா சவால் விடுத்துள்ளார். இந்த போட்டிக்கான இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி வரும் 3ம் தேதி சசெக்ஸில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணி தற்போது இங்கிலாந்தில் உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணியானது ஜிம்பாப்வேவுடன் பயிற்சி போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.