வெலிங்டன்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.
குறிப்பாக தோனிக்குப்பின் கேப்டன் பதவியை ஏற்ற விராட் கோலி இந்திய அணியை பல வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை அலங்கரிக்க வைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
அப்படிப்பட்ட அவர் அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 36 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது பலரது மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விராட் கோலியின் திடீர் ஓய்வு குறித்து பேப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவரான நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இங்கே ஒரு முடிவு இருந்தாக வேண்டும். ஏனெனில் ஓய்வுக்கு முன்பு நீங்கள் பயணத்தில் இருக்கிறீர்கள். அந்தப் பயணத்தில் உங்களுக்கு நாட்டம் இருக்கும். ஆனால் அது மற்ற மூவருக்கும் தொடர்பை ஏற்படுத்தாது. நாங்கள் அனைவரும் ஒரே சமயத்தில் விளையாடி வருகிறோம். ஒருவருக்கொருவர் நீண்ட காலம் போட்டியிட்டு வரும் நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்துள்ளோம்.
எனவே அந்த ஓய்வில் நீங்களும் கொஞ்சம் பிரதிபலிப்பீர்கள். விராட் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவருடன் நீண்ட காலமாக பேசியுள்ளேன். அதே சமயம் நாங்கள் கிரிக்கெட்டர்கள் மட்டுமல்ல மனிதர்களும்தான். எனவே எங்களுடைய வாழ்க்கையும் மாறக்கூடியது என்பதை நீங்கள் உணர வேண்டும்” என்று கூறினார்.