புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவின்போது பிரயாக்ராஜ் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பாக திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது. இந்த சிலையை அமைக்குமாறு கோரிக்கை வைத்த பாஷா சங்கம், மத்திய கலாச்சாரத் துறை, அலகாபாத் அருங்காட்சியகம் மற்றும் சென்னையின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி), ‘இந்து தமிழ் திசை’ நாளேடு ஆகியவை இணைந்து இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.
இதன் சிறப்பு விருந்தினர்களாக தமிழர்களான வாராணசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம், பிரயாக்ராஜின் டிஐஜி டாக்டர்.என்.கொளஞ்சி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பிரயாக்ராஜ் நகர மேயர் கணேஷ் சந்திர கேசர்வாணி, அலகாபாத் அருங்காட்சியக இயக்குநர் முனைவர்.ராஜேஷ் பிரசாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பாஷா சங்கத்தின் சார்பில் அதன் முன்னாள் நிர்வாகிகளான சி.எம்.பார்கவா மற்றும் ஆனந்த் கில்டியால் பங்கு பெறுகின்றனர். இந்து தமிழ் திசை சார்பில் அதன் டெல்லி மூத்த பத்திரிகையாளரான ஆர்.ஷபிமுன்னா உரையாற்றுகிறார். இவ்விழாவின் முக்கிய ஏற்பாட்டாளராக பாஷா சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் முனைவர்.எம்.கோவிந்தராஜன் உள்ளார்.
பிரயாக்ராஜில் 1976-ல் தேசிய அளவில் தொடங்கப்பட்டது பாஷா சங்கம். இந்தி, பெங்காலி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளைப் பேசுபவர்கள் இதன் உறுப்பினர்கள். பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என பாஷா சங்கத்தின் நிறுவனரும், மறைந்த பொதுச்செயலாளருமான, டாக்டர்.கிருஷ்ணசந்த் கவுடு 1990-ல் முதன்முதலில் கோரிக்கை வைத்தார். சுமார் 34 வருடங்களாக தொடர்ந்த கோரிக்கை உ.பி. முதல்வர் யோகி அரசால் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகா கும்பமேளா ஏற்பாடுகளுக்கான உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த வருடம் நடைபெற்றன. இவற்றில், ஆன்மிக வடிவங்களான பிரம்மா, கருடா, தீர்த்தராஜ், அறிஞர்களான வால்மீகி மற்றும் ரவீந்திரநாத் தாகூர், மன்னர்களான ஹர்ஷ வர்தன் மற்றும் அகில்யா பாய் ஹோல்கர் உள்ளிட்ட 13 சிலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இப்பட்டியலில், திருவள்ளுவர் சிலையும் பிரயாக்ராஜ் மாவட்ட டிஐஜி கொளஞ்சி முயற்சியால் சேர்க்கப்பட்டு மகா கும்பமேளாவின்போது நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி தமிழரான டிஐஜி என்.கொளஞ்சி ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறும்போது, “இதற்காக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இந்தி, சம்ஸ்கிருதம் மற்றும் உருது மொழிகளின் திருக்குறள் நூல்கள், உ.பி. அரசிடம் கோரிய மனுக்களின் விவரங்களை எடுத்துரைத்தேன். உ.பி.யில் முதலாவதாக திருவள்ளுவர் சிலை வைத்தாகி விட்டது. இனி அவரது குறள்களின் கருத்துகளை பரப்ப வேண்டும் என்பது இம்மாநிலத்தின் பணி செய்யும் தமிழ் அதிகாரிகளின் விருப்பம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், சிஐசிடி வெளியிட்ட திருவள்ளுவரின் திருக்குறள் இந்தி பதிப்பு வெளியிடப்பட உள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும்திருவள்ளுவர் சிலைகளை அமைத்த வி.ஜி.சந்தோஷம், பிரயாக்ராஜிலும் சிலையை அமைக்க முன்வந்தார். எனினும், சிலைக்கான செலவை உ.பி. அரசே ஏற்றது.