மாஸ்கோ: ரஷ்யாவில் மேற்கு பகுதியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ரயில் ஒன்று சிக்கி, அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
முதல்பாலம் இடிந்த சம்பவம், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பிரையான்ஸ் பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. பயணிகள் ரயில் மீது பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் ஓட்டுநரும் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. சிறிது நேரத்துக்கு பின்பு, உக்ரைன் எல்லைப்பகுதியின் குர்ஸ்க் பிராந்தியத்தில் மற்றொரு பாலம் இடிந்து வேறொரு ரயில் மீது விழுந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இடிபாடுகளில், குண்டுவெடிப்பினால் பாலம் இடிந்ததில் சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு சாலையில் விழுந்தது, இதனால் தீ விபத்தும் ஏற்பட்டது, ஆனால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்ததற்கும் குண்டுவெடிப்புகளே காரணம் என்று அறிக்கை ஒன்றில், ரஷ்ய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது என்றாலும் குண்டுவெடிப்புக்கான காரணம் என்னவென்று தெரிவிக்கவில்லை. மீட்புக்குழுவினர் பாலங்கள் இடிந்த இரண்டு இடங்களிலும் இடிபாடுகளை அகற்றியுள்ளனர். காயம்பட்ட சிலர் சிகிச்சைக்காக மாஸ்கோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பிரையான்ஸ் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆய்வின் போது வேறு சில தண்டவாளங்கள் சேதம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டது என்று மாஸ்கோ ரயில்வே தெரிவித்துள்ளது. என்றாலும் அது பாலம் இடந்த சம்பவத்துடன் தொடர்புடையதா என்று குறிப்பிடவில்லை. கடந்த காலங்களில் உக்ரைன் ஆதரவு நாசகாரர்கள் ரஷ்யாவின் ரயில்வே உள்கட்டமைப்பை தாக்கி அழித்தாக அதிகாரிகள் சிலர் குற்றம்சாட்டினர்.
உக்ரைன் மொழியில் சுருக்கமாக GUR என்று அழைக்கப்படும் ராணுவ உளவுப்பிரிவு, உணவு மற்றும் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷ்ய ராணுவ ரயில் கிரிமியாவுக்குச் செல்லும் வழியில் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. என்றாலும் இந்தத்தாக்குதல் GUR பிரிவால் நடத்தப்பட்டது என்று கூறவில்லை. பாலம் இடிந்த சம்பவத்தையும் தெரிவிக்கவில்லை.
அதன் அறிக்கையில், ரஷ்ய ஆக்கிரமிப்பு சபோரிஜியா மற்றும் கிரிமியாவுடனான ரஷ்யாவின் முக்கிய தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா கிரிமியாவை 2014-ல் தாக்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. கடந்த 2022, பிப்ரவரியில் உக்ரைன் மீது நடந்த முழு அளவிலான தாக்குதலில் இருந்து ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள சபோரிஜியா பகுதியில் முன்னேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.