ராமதாஸ் – அன்புமணி பிரச்சினைக்கு நானோ அல்லது பிற கட்சிகளோ காரணம் என்பதை ஏற்க முடியாது: ஜி.கே.மணி

அன்புமணி-ராமதாஸ் இடையேயான பிரச்சினைக்கு பிற கட்சிகள்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: உங்களுக்கும் (செய்தியாளர்களுக்கும்), கட்சியினருக்கும் தெரியாமல் எங்கேயாவது சென்றுவிடுவது அல்லது உயிருடன் இருக்கக்கூடாது என்று இரு முடிவுகளை நான் எடுத்துள்ளேன். அந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாகியுள்ளேன். பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

கடந்த 45 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் நான், கட்சி சிதறிப் போக வேண்டுமென்று கருதுவேனா? நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. ராமதாஸும், அன்புமணியும் விரைவாக சந்திக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தொண்டரின் விருப்பம். இதற்காக இருவரிடமும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். கட்சியில் எந்தப் பொறுப்பாளர்களையும் மாற்ற வேண்டாம் என்று தொடர்ந்து ராமதாஸிடம் வற்புறுத்தி வருகிறேன். சில ஊடகங்களில் என்னைப் பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது மிகவும் வேதனையளிக்கிறது. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பிற கட்சிகள்தான் காரணம் என்று கூறுவதை ஏற்க முடியாது.

தற்போது ஏற்பட்டுள்ள பிளவு சந்தர்ப்ப சூழலால் நேரிட்டுள்ளது. இதற்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஊடகத்தினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அன்புமணி கோபமாக சொல்லிய வார்த்தைகளை பெரிதுபடுத்தக் கூடாது.

ராமதாஸை அனைவரும் நேசிக்கின்றனர். அதேபோல, அரசியல் அதிகாரத்துக்கு அன்புமணி வர வேண்டும் என்பதும் அனைத்து தொண்டர்களின் விருப்பம். பாமக பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ராமதாஸ், அன்புமணியிடம் கலந்து பேசுவோம். இதில் அவசரப்படத் தேவையில்லை. நான் அன்புமணியிடம் பேசியது குறித்து ராமதாஸிடம் தெரிவித்தேன். அது உங்கள் விருப்பம் என்று அவர் கூறிவிட்டார். சமாதான முயற்சி வெற்றியடைய வேண்டும். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்: இதனிடையே, கடலூரில் 4 மாவட்டச் செயலாளர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் 3 மாவட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கியுள்ளார். இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் நகரத் தலைவர் முருகானந்தம் தலைமையிலான பாமகவினர், தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டின் முன்பு நேற்று தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் உள்ளவர்கள் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.