தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.

மேலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜூன் 1) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தனுஷ் பேசுகையில், “எனக்கு எதிராக எப்படியான எதிர்மறையான விஷயங்களையும் நீங்கள் கிளப்பலாம். ஆனால், என்னுடைய படத்தின் ரிலீஸுக்கு முன்னால் எதையும் தடுக்க முடியாது.
எங்களோடு என்னுடைய ரசிகர்கள் இருக்கிறார்கள்! என்னைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்களைச் சொல்லும் நீங்கள் கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்கள். இந்த சர்க்கஸ் இங்கே வேண்டாம்.
இங்கே இருப்பவர்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல, 23 வருடங்களாக என்னுடனே இருக்கும் என்னுடைய கம்பேனியன்ஸ், என்னுடைய வழித்துணை.
நீங்கள் சும்மா நான்கு வதந்திகளை கிளப்பி என்னை முடித்துவிடலாம் என்று நினைத்தால், அது மாதிரி முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது.

உங்களால் ஒரு செங்கலைக் கூட எடுக்கமுடியாது.” என்றவர், ரசிகர்களை நோக்கி, “எண்ணம் போல் வாழ்க்கை. சந்தோஷத்தை வெளியில் தேடாதீர்கள்.
உங்களுக்குள் சந்தோஷம் இருக்கிறது. நான் ஒரு வேளை சாப்பாடு இல்லாமலும் இருந்திருக்கிறேன். இன்று ஒரு நல்ல நிலையிலும் இருக்கிறேன். எந்த நிலையில் இருந்தாலும் நான் சந்தோஷமாகத்தான் இருப்பேன்.
‘குபேரா’ மாதிரியான திரைப்படம் இந்த உலகத்திற்குத் தேவை. என்னை நம்புங்கள், இந்தப் படம் ரொம்ப முக்கியம். எனக்கு இந்தப் படத்தில் முழு நம்பிக்கை இருக்கிறது.
‘வடசென்னை – 2’ படத்தைப் பற்றி 2018-லிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அடுத்த வருடம் நடக்கும்…” என்று பேசினார்.