குவஹாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் 15 மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 29-ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமாக உள்ள நிலையில், மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அசாமில் இன்றும் வெள்ள நிலைமை மோசமாகவே உள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாஹாட்டியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய வானிலை ஆய்வு மையம் (RMC), அசாமின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) வெளியிட்ட அறிக்கையில், கச்சார் மற்றும் ஸ்ரீபூமி மாவட்டங்களில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 மாவட்டங்களில் சுமார் நான்கு லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
கச்சார் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஸ்ரீபூமியில் 85,000 பேரும், நாகோன் மாவட்டத்தில் 62,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசு நடவடிக்கை: கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் 155 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முகாம்களில் தற்போது 10,272 மக்கள் தங்கி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,090.08 குவிண்டால் அரிசி, 284.63 குவிண்டால் பருப்பு, 952.76 குவிண்டால் உப்பு மற்றும் 4,726.26 லிட்டர் கடுகு எண்ணெய் ஆகியவற்றை அதிகாரிகள் விநியோகித்துள்ளனர்.
அசாம் முழுவதும் 764 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன, மேலும் 3,524.38 ஹெக்டேர் பயிர் நிலங்கள் சேதமடைந்துள்ளன என்று ASDMA தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் வெள்ள நீரால் கரைகள், சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
நதிகளில் வெள்ளப்பெருக்கு: திப்ருகார் மற்றும் நிமதிகாட்டில் பிரம்மபுத்திரா நதி அபாய அளவைத் தாண்டி பாய்கிறது. தன்சிரி மற்றும் கோபிலி ஆகிய அதன் துணை நதிகள் அபாய அளவைத் தாண்டி பாய்கின்றன.
பராக் ஆறு பதர்பூர் காட்டில் அபாயக் குறியைத் தாண்டி பாய்கிறது. ஸ்ரீபூமியில் அதன் துணை நதியான குஷியாரா மற்றும் மடிசூரியில் உள்ள கடகால் ஆகியவையும் அபாயக் குறியைத் தாண்டி பாய்கின்றன என்று ASDMA தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை மாலை எச்சரித்தார். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று நேரில் சென்ற ஹிமந்த பிஸ்வா சர்மா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
முதல்வருடன் அமித் ஷா உறுதி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிமந்த பிஸ்வா சர்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநிலத்தின் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் சாலை, ரயில் மற்றும் படகு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.