2025 ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தொடரின் இறுதி போட்டி நாளை (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. குவாலிஃபையர் 1ல் பஞ்சாப்பை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில், குவாலிஃபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இச்சூழலில் நாளை (ஜூன் 03) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் மோத உள்ளது. 17 ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லாத நிலையில், இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. முழு ஆதிக்கத்துடன் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணியில் விராட் கோலி 14 போட்டிகளில் 614 ரன்களை விளாசி உள்ளார். அதே சமயம் பந்து வீச்சில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். அவர் 11 போட்டிகளில் 21 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் இறுதி போட்டியில் வெல்லும் என்று தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். ஆர்சிபி என நினைக்கிறேன் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் ஆட்ட நாயகன் விருதை பெறுவார் என அதில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ஆர்சிபி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
ஏற்கனவே ஆர்சிபி அணிதான் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் அந்த அணியின் ரசிகர்களுக்கு இவரது பதிவு கூடுதல் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. முன்னதாக பல முன்னாள் வீரர்கள் ஆர்சிபி அணியை கூறி இருந்தனர். இந்த நிலையில், டேவிட் வார்னரும் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: எந்த ஒரு கேப்டனும் செய்யாத சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர்!
மேலும் படிங்க: தோல்வியுடன் வெளியேறிய மும்பை! ஹர்திக் பாண்டியா எடுத்த முக்கிய முடிவு!