“என்ன சர்க்கஸ் செய்தாலும் திமுகவினரை மக்கள் நம்ப போவதில்லை” – எல்.முருகன்

“படுத்துக்கொண்டே 200 இடங்களில் வெல்வோம் என்று ஜம்பம் பேசி வந்த மு.க.ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு, தொண்டர்கள் களப்பணியாற்றுமாறு கெஞ்சுகிறார். திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்ப போவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுகவினருக்கு, தனது மகனே எதிர்கால கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திட மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். தனது மகனுக்காக நடத்தப்பட்ட இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் வேடிக்கையாக இருக்கின்றன.

பாஜகவையும் மத்திய அரசையும் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றிவிட்டால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் மு.க.ஸ்டாலின்.

தனது மகன் தான் இளவரசர், அவர் தான் கட்சியின் எதிர்காலம், அவர் இடும் கட்டளைகளை ஏற்று திமுகவினர் நடக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த தீர்மானம். கட்சி தொடங்கிய காலம் முதல் மாநில சுயாட்சிக்காக தீர்மானம் நிறைவேற்றும் திமுகவினர், தாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது இதற்காக ஒரு துரும்பையாவது தூக்கி போட்டு இருப்பார்களா?

பொள்ளாச்சி பாலியல் வழக்கை பற்றி தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் திமுகவினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை மறந்து போவது ஏன்? ‘யார் அந்த சார்’ என்று தமிழகத்தில் இன்றும் எதிரொலிக்கும் அந்தக் கேள்வியை காது கொடுத்து கேட்கும் தைரியம் திமுகவினருக்கு இல்லை.

படுத்துக்கொண்டே 200 இடங்களில் வெல்வோம் என்று ஜம்பம் பேசி வந்த மு.க.ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு, 200 இடங்கள் என்றவர்கள் தற்போது தொண்டர்கள் களப்பணியாற்றுமாறு கெஞ்சுகிறார். திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்ப போவதில்லை. மக்கள் பணத்தை சுருட்டி ஒய்யார வாழ்வு வாழும் திமுகவினர், 2026 சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்து செய்த தவறுகளுக்காக தண்டனை பெற்று சிறைக்கு செல்வார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.