கோவை: ராஜ்யசபா எம்.பி. சீட்டுக்காக கமல் கொள்கையை மாற்றிவிட்டார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றபோது தூர்வாரப்படாத கால்வாயை துணியால் மறைத்துள்ளனர். மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று முதல்வருக்கே தெரியவில்லை. இதுதான் திராவிட மாடல் அரசு. கட்சி தொடங்கும்போது வாரிசு அரசியல் கூடாது என்ற கமல், ராஜ்யசபா சீட் கொடுத்தவுடன் வாரிசு அரசியல் இருக்கலாம் என்கிறார். எம்.பி. சீட்டுக்காக கொள்கையை மாற்றிக்கொண்டார்.
தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. மத்திய அரசின் திட்டங்களை மறைத்துவிட்டு, எதுவும் செய்யாத அரசாக தமிழக அரசு திகழ்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்த ரத்தீஷ் ரூ.300 கோடியில் வீடு, ஆகாஷ் ரூ.500 கோடியில் வீடு கட்டியுள்ளனர். தேர்தலில் திமுக பெட்டி பெட்டியாக பணம் கொடுக்கும் என்று விஜய் கூறுவது உண்மைதான்.
வரும் 22-ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.