சென்னை: சென்னையில் இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் தானியங்கி டிக்கெட் பரிசோதிக்கும் இயந்திரங்களை, திறந்த முறையில் செயல்படும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் தானியங்கி கட்டண நுழைவு வாயிலில் புதிய முறை சோதனை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. இதுபோல, மேலும், சில நிலையங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில், அனைத்து தானியங்கி கட்டண நுழைவு வாயில்களும் காலை 8 மணிமுதல் 11 மணிவரை மற்றும் மாலை 5 மணிமுதல் 8 மணிவரை திறந்த முறையில் (Normally Open) செயல்படுகின்றன. இது, நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணத்தை எளிதாக்கவும், பயணிகள் நீண்ட வரிசையில் நிற்கும் நேரத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
இந்த முறையில், தானியங்கி கட்டண நுழைவு வாயில்களின் கதவுகள் திறந்த நிலையில் இருக்கும். இதனால் பயணிகள் விரைவாகக் கடந்து செல்ல முடியும். எனினும், பயணக் கட்டணத்தை சரிபார்ப்பை உறுதிசெய்யும் வகையில், பயணிகள் தங்கள் பயண அட்டை அல்லது க்யூஆர் பயணச்சீட்டை தானியங்கி கட்டண நுழைவு வாயில்களில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்போது பச்சை விளக்கு தெரியும். இதையடுத்து, பயணிகள் தானியங்கி கட்டண நுழைவு வாயிலை கடந்து செல்லலாம்.
சிவப்பு விளக்கு தெரிந்தால் அல்லது எந்த பதிலும் கிடைக்காவிட்டால், பயணிகள் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் அல்லது பயணச்சீட்டு கவுன்ட்டர்களில் பயணச்சீட்டை சரிபார்க்க வேண்டும்.
இதுபோல, ஏஜி டிஎம்எஸ், விமான நிலையம் மெட்ரோ, அரசினர் தோட்டம் மெட்ரோ ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த மாத இறுதிக்குள் தானியங்கி கட்டண நுழைவு வாயிலில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும் இந்த மாற்றம் செய்ய ரூ.5 லட்சம் வரை செலவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.