IPL 2025 Finals, RCB vs PBKS: ஐபிஎல் 2025 தொடர் கிளைமேக்ஸை எட்டிவிட்டது. ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bangalore), ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
IPL 2025 Finals: அகமதாபாத் நகரில் இறுதிப்போட்டி
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (ஜூன் 3) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் இதே மைதானத்தில் தான் இறுதிப்போட்டி ஏறத்தாழ 2,3 நாள்களுக்கு நடைபெற்றது. அப்போது சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
IPL 2025 Finals: ரஜத் பட்டிதார் vs ஷ்ரேயாஸ் ஐயர்
நாளை நடைபெறும் போட்டியில் வெல்லும் அணிக்கே முதல் கோப்பை கிடைக்கப்போகிறது. 18 வருடங்களாக இரு அணிகளும் கடும் தவம் இருந்து, போராடி வந்துள்ளன. ஆர்சிபி அணிக்கு (RCB) இது 10வது பிளே ஆப் மற்றும் 4வது இறுதிப்போட்டி. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 3வது பிளே ஆப், 2வது இறுதிப்போட்டி. ஆனால் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் (Rajat Patidar) ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை, மாறாக பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) கடந்தாண்டுதான் கேகேஆர் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார்.
IPL 2025 Finals: வெறியோடு காத்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ்
குவாலிபயர் 1 போட்டியிலேயே பஞ்சாப் அணியை (PBKS) வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு வந்த ஆர்சிபிக்கு அவ்வளவு எளிதில் கோப்பையை கைக்கு கிட்டிவிடாது. பஞ்சாப் அணி இதே மைதானத்தில்தான் நேற்று மும்பை இந்தியன்ஸ் எனும் அசூரனை வதம் செய்து, அதே வெறியுடன் இறுதிப்போட்டிக்கு காலடி எடுத்து வைக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் உள்பட களத்தில் இருக்கும் 12 வீரர்களும் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருப்பார்கள்.
IPL 2025 Finals: விராட் கோலியின் கைகளுக்கு கப் கிடைக்குமா?
ஆர்சிபி அணியையும் சாதாரணமாக நினைக்கக் கூடாதுதான். ஆர்சிபி அணியில்தான் ஏறத்தாழ அதிகமான வீரர்கள் ஆட்ட நாயகன் விருதை வென்றிருக்கின்றனர். அதாவது ஒரு வீரரை மட்டுமே ஆர்சிபி நம்பியதில்லை. ஒரு அணி என்ற கூட்டு முயற்சியின் வெளிப்பாடே ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதற்கு முதல் காரணம். அதுவும் 18 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டின் கிங்காக பார்க்கப்படும் விராட் கோலிக்கும் (Virat Kohli) ஒரு ஐபிஎல் கோப்பை கூட கிடைக்கவில்லை. எனவே பலரும் அந்த ஒரு காரணத்திற்காக ஆர்சிபி கோப்பை அடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
IPL 2025 Finals: வருகிறார் டிம் டேவிட்
இந்த சூழலில் ஆர்சிபி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வந்துள்ளது. அதாவது கடந்த சில போட்டிகளாக காயத்தில் இருந்து வந்த நட்சத்திர வீரர் டிம் டேவிட் (Tim David Injury Update) உடற்தகுதியை பெற்றுவிட்டார் என கூறப்படுகிறது. ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் இன்று அகமதாபாத் நகரில் செய்தியாளர்களை சந்தித்தபோது டிம் டேவிட் காயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “மருத்துவர்கள் உடன் இருக்கிறார்கள். இன்று மாலைக்குள் எங்களுக்குள் முடிவு தெரியவரும்” என்றார்.
இதன்மூலம் டிம் டேவிட் (Tim David) நாளைய போட்டிக்கு உடற்தகுதியை நிரூபிக்கும்பட்சத்தில் லியம் லிவிங்ஸ்டன் அணியில் இருந்து நீக்கப்படுவார். டிம் டேவிட் நேரடியாக பிளேயிங் லெவனில் விளையாடுவார். தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக ‘சிங்கப்பூர் சித்தப்பா’ என அழைக்கப்படும் டிம் டேவிட் அணிக்குள் மீண்டும் வந்தால் ஆர்சிபி ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். ஆர்சிபி அணி வேறு பிளேயிங் லெவன் மாற்றத்தை செய்யாது. பஞ்சாப் கிங்ஸ் அணியும் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை.
IPL 2025 Finals: பிளேயிங் லெவன் கணிப்பு
ஆர்சிபி: விராட் கோலி, பில் சால்ட் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரஜத் பட்டிதார், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), குர்னால் பாண்டியா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜாஷ் ஹசில்வுட், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள். இம்பாக்ட் வீரர்: சுயாஷ் சர்மா
பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜாஷ் இங்லிஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், யுஸ்வேந்திர சஹால், ஹர்ஷ்தீப் சிங், கைல் ஜேமீசன். இம்பாக்ட் வீரர்: வைஷாக் விஜயகுமார்.