புதுடெல்லி,
பராகுவே நாட்டின் அதிபர் சான்டியாகோ பெனா பலாசியோஸ் இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் இந்தியாவில் டெல்லி, மும்பை நகரங்களில் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லி பாலம் விமான நிலையத்தில் இன்று வந்திறங்கிய அவரை மத்திய இணை மந்திரி ஹர்ஷ வர்தன் மல்கோத்ரா நேரில் சென்று வரவேற்றார்.
இதன்பின்னர், அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பராகுவே ஜனாதிபதி சான்டியாகோ பெனாவை வரவேற்றார். இதன் பின்னர் ஜனாதிபதி மாளிகையில் சான்டியாகோவுக்கு கவுரவம் அளிக்கும் வகையில், சிறப்பான முறையில் விருந்து வழங்கப்பட்டது.
இதன்பின்னர், முர்மு உரையாற்றும்போது, இது ஒரு வரலாற்று தருணம். 1961-ம் ஆண்டு நம்முடைய 2 நாடுகளுக்கும் இடையே தூதரக அளவிலான உறவுகள் ஏற்படுத்தப்பட்டதில் இருந்து, நம்முடைய இரண்டு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கை, ஜனநாயக மதிப்புகள் அடிப்படையில் இனிய மற்றும் நட்புரீதியிலான இருதரப்பு உறவுகளை பகிர்ந்து கொள்கின்றன.
நம்முடைய மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக, பகிரப்பட்ட உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுகின்றன என பேசியுள்ளார்.