திருநெல்வேலி: “தமிழகத்தில் திருவிழா இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் மண்டல அளவிலான நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், அப்துல்வகாப் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வாகை சந்திரசேகர் கூறியது: “திருநெல்வேலி மண்டலத்திலுள்ள 5 மாவட்டங்களை சேர்ந்த 371 கலைஞர்களுக்கு ரூ.13.17 லட்சம் மதிப்பில் நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞர்கள், நாடக மற்றும் திரைப்பட நடிகர்கள் போன்ற கலைஞர்களுக்காக தமிழக முதல்வர் பெருமளவு நிதி ஒதுக்கி, அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். மாவட்ட ரீதியாக கலைஞர்களை நேரடியாக அரசு துறைகள் மூலம் சந்தித்து அவர்களது குறைகளை சரி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பணிகள் நடந்து வருகிறது. அரசுத் துறைகளில் மாவட்ட ரீதியாக கலைஞர்களை தேர்வு செய்து நிகழ்ச்சிகள் வழங்கி, அவர்களுக்கு சிறந்த ஊதியம் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் காலியாக உள்ள நாதஸ்வர மற்றும் தவிலிசை கலைஞர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுக்கு இயல் இசை நாடக மன்றம் பரிந்துரை செய்துள்ளது. நாதஸ்வர இசை கலைஞர்களுக்கு அரசு விழாக்களிலும், கோயில்களில் நிகழ்ச்சிகளிலும் வாய்ப்பு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இசைப் பள்ளியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவர் என்ற அரசாணையை திருத்தி அமைப்பதற்கும், வயது வரம்பை குறைப்பதற்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு ஆண்டின் 6 மாத காலம் பணி இருக்கும். பணி இல்லாத மீதமுள்ள 6 மாத காலத்திற்கு அவர்களது வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளை செய்வதற்கும் அரசு மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோயில் திருவிழாக்களில் நாட்டுப்புற இசை கலைஞர்கள் நாடகங்கள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் திருவிழாக்கள் அதிகம் உள்ள சூழலை கருத்தில் கொண்டு ஒரு மாதத்துக்குள் அந்த தளர்வுகளை பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.