“நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா, ராணுவ நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற சமாதான முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.

எனினும், அமைதிக்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

உக்ரைன் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமை தாங்குவார் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் அவர், “எங்கள் சுதந்திரம், எங்கள் அரசு மற்றும் எங்கள் மக்களைப் பாதுகாக்க நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்,” என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “நீடித்த, நம்பகமான, அமைதிக்கு வழிவகுக்கும் கண்ணியமான நடவடிக்கைகளுடன், முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை நாங்கள் தொடர்ந்து முன்மொழிகிறோம். இது தொடர்பாக ரஷ்யாவுக்கு நாங்கள் வழங்கிய திட்டம் தர்க்கரீதியானது மற்றும் யதார்த்தமானது.

ஆனால், அமைதியை ஏற்பத்துவதற்கான தனது திட்டத்தை ரஷ்யா இதுவரை யாருடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. எங்களிடமோ, துருக்கியிடமோ, அமெரிக்காவிடமோ ரஷ்யாவின் அமைதிக்கான திட்ட ஆவணம் இல்லை. இருந்த போதிலும், அமைதியை நோக்கிய பாதையில் குறைந்தபட்சம் சில முன்னேற்றங்களை அடைய நாங்கள் முயற்சிப்போம்.

ராஜதந்திரம் செயல்பட வேண்டும் என்றும் உண்மையான போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் உலகில் உள்ள அனைவரும் விரும்புகிறார்கள். ரஷ்யா, ராஜதந்திரத்துடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். அனைவரும் ஒரு தீவிரமான அமைதியை விரும்புகிறார்கள் – ரஷ்யா அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.

அதுதான் அமைதி பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே எங்கள் நிகழ்ச்சி நிரலை முன்வைத்துள்ளோம். மேலும் அமெரிக்க தரப்பு பொருளாதாரத் தடைகள் பிரச்சினையில் தீர்க்கமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அது அமைதியை நெருங்க உதவும்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உக்ரைன் ராணுவம் ரஷ்யா மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய ட்ரோன் தாக்குதலில் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

“ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள பெலாயா விமானத் தளம் உட்பட பல விமானநிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த 41 குண்டுவீச்சு விமானங்களை உக்ரைனின் ட்ரோன்கள் தாக்கி அழித்தன. உக்ரைன் எல்லையில் இருந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆனது. உக்ரைன் அதிபர் விலோடிமிர் ஜெலென்ஸ்கி தனிப்பட்ட முறையில் இதனை மேற்பார்வையிட்டார்.” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் இந்த தாக்குதலை அடுத்து, அதன் ஒரு ராணுவப் பிரிவைத் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை உக்ரைனுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களை ஏவியதாகவும், 7 ஏவுகணைகளும் ஏவப்பட்டதாகவும் ரஷ்ய விமானப்படைக்கான தகவல் தொடர்புத் தலைவர் யூரி இக்னாட் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டின் ஒரு ராணுவப் பயிற்சிப் பிரிவின் மீது நடத்தப்பட்ட ரஷ்ய தாக்குதலில் குறைந்தது 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.