பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலைக்கு அறிமுக விழா: தமிழ் அதிகாரிகள் பங்கேற்பு

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா சமயத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைக்கு அறிமுக விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை பாஷா சங்கம், மத்தியக் கலாச்சாரத் துறை, சென்னையின் சிஐசிடியுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்தியது. இதில், உத்தரப் பிரதேசத்தின் தமிழ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை, வாரணாசியின் காசி தமிழ்ச் சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்தார். மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) வெளியீடான அதன் அறிமுக விழாவும் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றித் துவக்கப்பட்ட விழாவில் திருவள்ளுவரின் சிறிய உருவச் சிலையும், இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலும் சிஐசிடி சார்பில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன. உ.பி.யில் திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்முதலில் கோரிய பாஷா சங்கத்தின் பொதுச் செயலாளரான மறைந்த கே.சி.கவுடுவின் மனைவி ரேகா கவுரை விருந்தினர்கள் பாராட்டி விழாவில் கவுரவித்தனர்.

உ.பி.யின் பிரயாக்ராஜில் மொழிகளைப் பாலமாக்கி தேச ஒற்றுமைக்காக 49 வருடங்களாகச் செயல்படும் பொதுநல அமைப்பு பாஷா சங்கம். இதன் சார்பில் கடந்த 34 வருடங்களாக பிரயாக்ராஜில் சிலை வைக்கக் கோரப்பட்டு வந்தது. இதற்கான முயற்சியில் கடந்த 10 வருடங்களாக ‘இந்து தமிழ் திசை’யும், அது குறித்து செய்திகளை வெளியிடுவதுடன், பல்வேறு வகைகளில் உதவி வந்தது.

இறுதியில் பிரயாக்ராஜில் டிஐஜியாக அமர்த்தப்பட்ட தமிழரான டாக்டர்.என்.கொளஞ்சி முயற்சியால், மகா கும்பமேளா சமயத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதோடு, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருந்த விழா நடைபெறவில்லை. இதற்கு மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கில் குவிந்த மக்கள் நெரிசல் காரணமானது. இதனால், சிலைக்கான அறிமுக விழாவை பாஷா சங்கம், மத்தியக் கலாச்சாரத் துறை, அலகாபாத் அருங்காட்சியகம், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியோருடன் ’இந்து தமிழ் திசை’ நாளேடும் இணைந்து நடத்தின.

பிரயாக்ராஜின் டிஐஜியான டாக்டர்.என்.கொளஞ்சி தன் உரையில், “வெறும் ஏழு வார்த்தைகளின் ஒரு குறள் ஆழமான கருத்துகளைக் கொண்டது. பிரதமர் அறிமுகப்படுத்திய யோகா தினம் போல், உலகத் திருக்குறள் அல்லது திருவள்ளுவர் நாள் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். கல்வித் திட்டத்தில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குறளையாவது போதிக்க வேண்டும்.

நம் நாட்டின் தேசியப் பறவை, விலங்கு, மலரைப் போல், தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும். வட இந்தியாவில் ஒரு மனிதன் பிறக்கும்போதே இறைவனால் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாக நம்பிக்கை உண்டு. ஆனால், ‘தெய்வத்தால் ஆகாதெனினும்’ எனும் குறளின்படி இறைவனால் முடியாததையும் மனிதர் தன் முயற்சியால் வெல்ல முடியும். எனவே, இங்குள்ளவர்கள் ஒரு நாளுக்கு ஒரு குறளாவது படித்தறிவது நல்லது’ எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற விழாவில் வாரணாசியின் மண்டல ஆணையரான எஸ்.ராஜலிங்கம் பேசுகையில், “இங்குத் திருவள்ளுவர் சிலை நிறுவக் கோரிய பாஷா சங்கம், அதற்காக உதவிய இந்து தமிழ் திசை மற்றும் டிஐஜி கொளஞ்சி ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள். அறம், பொருள், இன்பம் என அனைத்தின் மீதும் 1330 குறள் எழுதியது திருவள்ளுவரின் தனித்துவம். அவர் தம் குறளில் தமிழ் எனும் வார்த்தையை எங்குமே பயன்படுத்தவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் அது உலகப் பொதுமறையாகக் கருதப்படுகிறது. தமிழகத்துக்கு வந்த மகாத்மா காந்தி மூலமொழியானத் தமிழைக் கற்று திருக்குறளைப் படிப்பேன் எனத் தெரிவித்தார்.

உ.பி.யின் பிரயாக்ராஜில் 1976-இல் தேசிய அளவில் துவக்கப்பட்டது பாஷா சங்கம். இந்தி, பெங்காலி, மராட்டி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளைப் பேசுபவர்கள் இதன் உறுப்பினர்கள். இந்த சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனரும், மறைந்த பொதுச் செயலாளருமான டாக்டர்.கிருஷ்ணசந்த் கவுடுவினால் 1990-இல் துவங்கி பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை அமைக்கக் கோரப்பட்டு வந்தது. சுமார் 34 வருடங்களாகத் தொடர்ந்த கோரிக்கையை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசால் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகா கும்பமேளா ஏற்பாடுகளுக்கான உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த வருடம் நடைபெற்றன. இவற்றில், ஆன்மிக வடிவங்களான பிரம்மா, கருடா, தீர்த்தராஜ், அறிஞர்களான வால்மீகி மற்றும் ரவிந்திரநாத் தாகூர், மன்னர்களான ஹர்ஷவர்தன் மற்றும் அகில்யாபாய் ஹோல்கர், உள்ளிட்ட 13 சிலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இப்பட்டியலில், திருவள்ளுவர் சிலையும் பிரயாக்ராஜ் மாவட்ட டிஐஜி கொளஞ்சி முயற்சியால் சேர்க்கப்பட்டு மகா கும்பமேளாவின் போது நிறுவப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கள்ளக்குறிச்சி தமிழரான டிஐஜி என்.கொளஞ்சி கூறும்போது, “இதற்காக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இந்தி, சமஸ்கிருதம் மற்றும் உருது மொழிகளின் திருக்குறள் நூல்கள், உ.பி அரசிடம் கோரிய மனுக்களின் விவரங்களை எடுத்துரைத்தேன். உ.பி.யில் முதலாவதாக திருவள்ளுவர் சிலை வைத்தாகி விட்டது. இனி அவரது குறள்களின் கருத்துகளையும் வேகமாகப் பரப்புவது இம்மாநிலத்தின் பணிசெய்யும் தமிழ் அதிகாரிகளின் விருப்பம்” எனத் தெரிவித்தார்.

சிலையுடன் சேர்த்து சிஐசிடி வெளியிட்ட திருவள்ளுவரின் திருக்குறள் இந்தி பதிப்பின் அறிமுகமும் நடைபெறவிருக்கிறது. வெளிநாடுகள் உள்ளிட்ட பல இடங்களில் திருவள்ளுவர் சிலைகளை அமைத்த விஜி.சந்தோஷம், திருவள்ளுவர் சிலையைத் தனது சார்பில் அளிக்க முன்வந்தார். எனினும், இதை மறுத்த உ.பி அரசு சிலைக்கான செலவைத் தானே ஏற்றது. இந்நகரிலுள்ள ரயில் நிலையங்களில் முக்கியமானது லீடர் ரோடிலுள்ள பிரயாக்ராஜ் ஜங்ஷன் ரயில் நிலையம். இங்கு வந்து இறங்குபவர்களை வரவேற்கும் வகையில் எதிரிலுள்ள நாற்சந்தியில் திருவள்ளுவர் சிலை கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.