அமராவதி: மதச்சார்பின்மை என்பது இருவழி சாலையாக இருக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இன்புளுயன்சரும் சட்டக்கல்லூரி மாணவியுமான ஷர்மிஸ்தா பனோலி (22) சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை, மத ரீதியாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரின் பேரில் கொல்கத்தா போலீஸார் ஷர்மிஸ்தாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து ஆந்திர துணை முதல்வரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: சட்டக்கல்லூரி மாணவியான ஷர்மிஸ்தா ஆபரேஷன் சிந்தூர் பற்றி தெரிவித்த கருத்து வருத்தமளிப்பதாகவும் சிலரை காயப்படுத்துவதாகவும் உள்ளது. எனினும் தவறை உணர்ந்த அவர் அந்த வீடியோவை சமூக ஊடகத்திலிருந்து நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனாலும் மேற்கு வங்க காவல் துறை விரைவாக செயல்பட்டு ஷர்மிஸ்தா மீது நடவடிக்கை எடுத்தது.
ஆனால், சனாதன தர்மத்தை கேலி செய்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உட்பட தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நம்முடைய மத நம்பிக்கையை காந்த தர்மம் என அவமதித்தவர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தாதது ஏன்? அவர்கள் மன்னிப்பு கேட்பது எப்போது? அவர்களை கைது செய்வது எப்போது? இவ்வாறு அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “மேற்கு வங்கத்தில் மதக் கலவரத்தை தூண்ட பாஜக முயற்சி செய்கிறது. அதன் காந்த தர்மம் இந்து மதத்தின் உண்மையான கொள்கைகளுக்கு எதிரானது” என்றார்.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், “மத நிந்தனை எப்போதும் கண்டிக்கத்தக்கது. மதச்சார்பின்மை என்பது சிலருக்கு கேடயமாகவும் சிலருக்கு ஆயுதமாகவும் இருக்கக் கூடாது. அது இருவழிச் சாலை போல நியாயமானதாக இருக்க வேண்டும். மேற்கு வங்க காவல் துறையின் நடவடிக்கையை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, ஷர்மிஸ்தாவை சட்டவிரோதமாக கைது செய்திருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை என கொல்கத்தா போலீஸார் தெரிவித்துள்ளனர்.