பெங்களூரு: சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்வில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்” என குறிப்பிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட அமைப்பினர், அவருக்கு எதிராக பெங்களூரு போலீஸில் புகார் அளித்தனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கன்னட கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறும்போது, “கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. கன்னட மொழிக்கு எதிரான சிறு கருத்தையும் எங்களால் ஏற்க முடியாது. கமல்ஹாசன் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் அவர் நடித்த அனைத்து திரைப்படங்களையும் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு கூறும்போது, ‘‘கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்காவிடில் அவரது படங்களுக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்படும்” என்றார்.