கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பங்கேற்றார். இதன்பின்னர் அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், அசாம், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வரும் சூழலில் அந்த மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மணிப்பூர் கவர்னரை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்.
எந்தவொரு கடினம் வாய்ந்த சூழலையும் எதிர்கொள்வதற்கு சாத்தியப்பட்ட எல்லா உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என உறுதியளித்தேன். வடகிழக்கு மாநில மக்களுக்கு ஒரு பாறை போன்று மோடி அரசு துணையாக நிற்கும் என்று பதிவிட்டார்.
இதன்பின்னர் அவர் கொல்கத்தா நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் கட்சியின் தொண்டர்கள் முன் இன்று பேசும்போது, ஊடுருவலின் நிலம் மற்றும் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்க கூடிய ஒன்றாக மேற்கு வங்காளம் உருமாறும் அளவுக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மாற்றி விட்டார். அவர் முதல்-மந்திரி ஆன பின்னர் பா.ஜ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.
குண்டுவெடிப்புகள் மற்றும் இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகின்றன. 2026-ம் ஆண்டில் எங்களுடைய கட்சி ஆட்சியமைக்கும். ஊடுருவலை நிறுத்துவோம். ஊழலை நிறுத்துவோம். இந்துக்களின் பெருமளவிலான இடம்பெயர்தலை நிறுத்துவோம் என்று பேசியுள்ளார்.