இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மறைவு திரைத்துறையினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மதுரையிலிருந்து நேற்றிரவு சென்னை திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இயற்கை எய்தியிருக்கிறார்.

சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட விக்ரம் சுகுமாரனின் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
விக்ரம் சுகுமாரன் மறைவு குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ், “விக்ரம் சுகுமாரன் அண்ணனை பாலுமகேந்திரா சாரிடம் அவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதே எனக்குப் பழக்கம்.
ஒரு தம்பியாக நினைத்து என்னிடம் சினிமா பற்றி நிறைய விஷயங்களைப் பேசியிருக்கார்.
இப்போது படம் பண்ணிய பிறகும் சந்திக்கும்போதெல்லாம் ஆழமான, அழுத்தமான கதாபாத்திரங்களைப் பற்றி விவாதிக்கக்கூடிய ஒரு அண்ணனாக இருந்தார்.

அவருடைய மரணம் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாக இருக்கிறது. எனக்கு அவ்வளவு வலியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் நிறைய திட்டங்கள் வைத்திருந்தார்.
நல்ல சினிமாக்களை எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டார். காத்திரமாக சண்டைப் போடக்கூடிய ஒரு மனிதராக இருந்தார். அண்ணனோட இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.
அவருடைய படைப்புகள் மூலமாக மக்களின் மனதில் என்றும் இருப்பார் என நம்புகிறேன். ” என்று கூறியிருக்கிறார்.