மதுரை: அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில் புகழ் பெற்ற அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்கள் உள்ளன. அகஸ்தியர் கோயிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது.
இந்த அருவிக்கு பொதுமக்கள், பக்தர்கள் என பலரும் குளிப்பதற்காக வருகின்றனர். இந்த அருவியில் குளிக்கவும், வாகனங்கள் நிறுத்தவும் தமிழ்நாடு வனத்துறையின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் தான் அருவியில் குளிக்கவும், வாகனங்கள் நிறுத்தவும் கட்டணம் வசூலிக்க முடியும்.
அதற்கு பதிலாக வனத்துறை சார்பில் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. மேலும், உள்ளூர் மக்களிடமும் கட்டணம் வசூலிக்கின்றனர். இது சட்டவிரோதம். எனவே அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் மற்றும் அகஸ்தியர் அருவிக்கு வரும் உள்ளூர் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கி அமர்வில் இன்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நெல்லை அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டனர்.