அமராவதி: ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கொண்டபல்லியிலிருந்து களிமண் விநாயகர் சிலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஆந்திர மாநிலம், கொண்டபல்லி மர பொம்மைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. . பல வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டபல்லி பொம்மைகளை விரும்பி வாங்குவது வழக்கம்.
இந்நிலையில், இங்குள்ள சிற்ப கலைஞர்களால் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு களிமண் விநாயகர் சிலைகள் இந்த ஆண்டு முதல் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதற்கான ஆர்டர்களும், அங்குள்ள தெலுங்கு கூட்டமைப்பினர் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு இச்சிலைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதற்காக கங்கை நதிக்கரையில் இருந்து களிமண்கள் கொண்டு வந்து தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறிய முத்து, பல வர்ணகற்களால் தயாரிக்கப்பட்டு, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஒரு அடி முதல் 3 அடி வரையிலான சிலைகளுக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக சிற்ப கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.