‘ஆபரேஷன் சிலந்தி வலை' மூலம் 41 ரஷ்ய போர் விமானங்களை உக்ரைன் அழித்தது எப்படி?

உக்ரைன் ராணுவத்தின் ‘ஆபரேஷன் ஸ்பைடபர் வெப்’ மூலம் 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டது தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்திருக்கிறது.

இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா, அமூர் ஆகிய 5 விமான படைத் தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இதில் ரஷ்யாவின் டியு-95, டியு-22 உட்பட 41 அதிநவீன போர் விமானங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திட்டமிட்டு ரஷ்யா மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய உக்ரைன் ராணுவத்தை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ரஷ்யாவின் அமூர் விமான படைத் தளம் உக்ரைன் எல்லையில் இருந்து 6,000 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த நாட்டின் பெலயா தளம் 4,300 கி.மீ., ஒலன்யா தளம் 3,674 கி.மீ., டியாகிலெவா தளம் 2,161 கி.மீ., இவாநோயா தளம் 2,000 கி.மீ. தொலைவில் உள்ளன.

ரஷ்யாவின் வான் பாதுகாப்பு கவசம் மிகவும் வலுவானது. இந்த சூழலில் ரஷ்ய எல்லைக்குள் மிக நீண்ட தொலைவுக்கு பறந்து சென்று போர் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவது மிகவும் கடினம்.

மிக தொலைவில் உள்ள ரஷ்ய விமான படை தளங்களை அழிக்க கடந்த 2023-ம் ஆண்டில் ‘ஆபரேஷன் ஸ்பைடபர் வெப்’ என்ற திட்டத்தை வரையறுத்தோம். எங்களது எப்பிவி ட்ரோன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தினோம். சுமார் 18 மாதங்கள் உழைப்பின் பலனாக ரஷ்யாவின் 5 விமான படை தளங்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி அந்த நாட்டுக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளோம். எங்களது தாக்குதல் உலக வரலாற்றில் பிரதான இடத்தைப் பிடிக்கும். இவ்வாறு உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷ்ய விமான படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அந்த நாட்டு ராணுவத்தின் உளவுத் துறை அதிதீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் ட்ரோன்களின் உதிரி பாகங்கள் கடத்தப்பட்டு உள்ளன. இவை ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகரில் உள்ள குடோனில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு உதிரி பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்யாபின்ஸ்க் நகரின் குடோனில் இருந்து லாரிகள் மூலம் ட்ரோன்கள் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளன. சுமார் 5-க்கும் மேற்பட்ட லாரிகள் ரஷ்ய விமான படை தளங்களை நோக்கி சென்று உள்ளன.

ஒரு லாரியை அலெக்சாண்டர் என்பவர் ஓட்டியுள்ளார். செல்யாபின்ஸ்க் நகரில் இருந்து முர்மன்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்யாவின் ஒலன்யா விமான படை தளத்துக்கு அவர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். லாரி ஓட்டுநருக்கு தாக்குதல் திட்டம் குறித்து எதுவும் தெரியாது. அவர் தனது லாரியில் மரப்பெட்டிகளை ஏற்றி சென்றுள்ளார். அந்த மரப்பெட்டிகளுக்கு சொந்தகாரர் என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் அவருக்கு செல்போன் வாயிலாக வழிகாட்டி உள்ளார். கடைசியாக ஒலன்யா விமான படை தளம் அருகேயுள்ள பெட்ரோல் நிலையத்தில் லாரியை, மர்ம நபர் நிறுத்த சொல்லி உள்ளார். மேலும் லாரியின் கதவுகளை திறந்து பார்க்க கூறி உள்ளார். லாரியின் கதவுகளை ஓட்டுநர் திறந்ததும் மரப்பெட்டிகள் தானாக திறந்து, ட்ரோன்கள் வெளியே பறந்துள்ளன.

மற்றொரு லாரி டிரைவர் செர்ஜி என்பவர் செல்யாபின்ஸ்க் நகரில் இருந்து டியாகிலெவா விமான படைத் தளம் பகுதிக்கு லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த விமான படை தளம் அருகில் சென்றபோது அவரது லாரியின் பின்புறம் வெடிபொருள் வெடித்து மேற்கூரை உடைந்திருக்கிறது. அப்போது லாரியில் இருந்து ட்ரோன்கள் மேலெழுந்து பறந்துள்ளன.

ரஷ்யாவின் 5 விமான படைத் தளங்களுக்கும் இதே பாணியில் லாரிகளில் ட்ரோன்கள் கடத்திச் செல்லப்பட்டு மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. ஒரு லாரியின் ஓட்டுநர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். ட்ரோன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து லாரிகளும் ஆர்டம் என்பவருக்கு சொந்தமானவை. உக்ரைனை பூர்விகமாகக் கொண்ட அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் உக்ரைனுக்கு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம்.

ட்ரோன் தாக்குதல் தொடர்பாக பலரை கைது செய்துள்ளோம். பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செல்யாபின்ஸ்க் நகர் குடோனின் உரிமையாளர் தலைமறைவாக உள்ளார். அவர் உக்ரைனுக்கு தப்பிச் சென்றிருக்கலாம். உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலை, தீவிரவாத தாக்குதலாக கருதுகிறோம். இதற்கு அந்த நாட்டுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

உக்ரைன் ராணுவ தாக்குதல் குறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: ரஷ்யா முழுவதும் 21-க்கும் மேற்பட்ட விமான படைத் தளங்கள் உள்ளன. இந்த விமான படை தளங்களில் திறந்தவெளியில் போர் விமானங்கள் நிறுத்தப்படுவது வழக்கம். மேற்கூரைகளுக்கு கீழ் போர் விமானங்களை நிறுத்த ரஷ்ய பாதுகாப்புத் துறை நிபுணர்கள் பலமுறை அறிவுரை கூறினர். ஆனால் நிபுணர்களின் ஆலோசனைக்கு ரஷ்ய விமானப் படை செவிசாய்க்கவில்லை.

இதன்காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உளவு செயற்கைக்கோள்கள், ரஷ்ய விமான படை தளங்களில் திறந்தவெளிகளில் நிறுத்தப்பட்டிருந்த போர் விமானங்களை எளிதாக கண்டறிந்தன.

மேலும் உக்ரைனின் ட்ரோன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது. இதன்படி ரஷ்ய போர் விமான வடிவமைப்புகளை கண்டறியவும் அந்த போர் விமானங்களின் பெட்ரோல் டேங்குகளை குறிவைத்து குண்டுகளை வீசவும் ட்ரோன்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் 5 விமான படைத் தளங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் இருந்து உக்ரைனின் எப்பிவி ட்ரோன்கள் சீறிப் பாய்ந்தன. இந்த ட்ரோன்கள் ரஷ்ய போர் விமானங்களின் பெட்ரோல் டேங்குகளை குறிவைத்து குண்டுகளை வீசின. இதில் 41 ரஷ்ய போர் விமானங்கள், உளவு விமானங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகி உள்ளன.

ஒரு எப்பிவி ட்ரோனை தயாரிக்க ரூ.40,000 மட்டுமே செலவாகும். இந்த ட்ரோன்கள் மூலம் ரூ.4,000 கோடி மதிப்புள்ள அதிநவீன போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. உக்ரைன் ராணுவம் 117 ட்ரோன்களை தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கிறது. இவை தற்கொலை ட்ரோன்கள் ஆகும்.

தற்போது ரஷ்யா, உக்ரைன் இடையே துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையை சீர்குலைத்து போரை தீவிரப்படுத்தும் நோக்கில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இனிமேல் ரஷ்யா, உக்ரைன் போர் அதிதீவிரமாக மாறும். இவ்வாறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுத தாக்குதல் நடத்துமா ரஷ்யா? – உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதல் குறித்து ரஷ்யாவின் மூத்த ராணுவ தளபதிகளுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, உக்ரைனின் முக்கிய ராணுவ தளங்களை குறிவைத்து அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படைத் தளத்தின் மீது ஐப்பானிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசி பேரழிவை ஏற்படுத்தியது. இதன்பிறகே அமெரிக்காவிடம், ஜப்பான் சரண் அடைந்தது. இதேபாணியில் உக்ரைன் மீது ரஷ்ய விமானப் படை அணு ஆயுத தாக்குதலை நடத்த வாய்ப்பிருக்கிறது என்று ஐரோப்பிய பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.