ஒடிசாவில் மாவோயிஸ்ட்களால் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 2.5 டன் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றினர்.
ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் ஜார்க்கண்ட் எல்லையை ஒட்டிய வனப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒடிசா காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை, ஜாகுவார் படை, சிஆர்பிஎப் மற்றும் மாவட்ட தன்னார்வ படை அடங்கிய கூட்டுப்படையினர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2.5 டன்னுக்கும் மேற்பட்ட வெடிபொருட்களை கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வெடிபொருட்கள் கடந்த 27-ம் தேதி சுந்தர்கர் மாவட்டத்தின் கே.பாலங் பகுதியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை. கல்குவாரி ஒன்றுக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்டபோது மவோயிஸ்ட்கள் துப்பாக்கி முனையில் பறித்துச் சென்றனர். சில வெடிபொருட்களை நிலத்தில் புதைத்து வைத்திருந்தனர். மற்றவற்றை பாறைகளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்தனர்” என்றார்.