பெங்களூரு,
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இது சரியல்ல. கன்னடம் உண்மையானது, கன்னடம் நித்தியமானது. இது கன்னடர்களின் அழுகுரல் மட்டுமல்ல. கன்னடத்தாய் புவனேஸ்வரி அம்மன் கன்னடர்களின் உறுதிமொழி ஆகும். மூத்த மொழியியல் நிபுணர்கள், கன்னடம் வேறு எந்த மொழியில் இருந்தும் பிறக்கவில்லை என்று கூறியுள்ளனர்.ஆனால் நடிகர் கமல்ஹாசன் வரலாற்று நிபுணரும் இல்லை, மொழியியல் வல்லுநரும் இல்லை. அவர் தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக பொறுப்பின்றி கூறியது கண்டிக்கத்தக்கது. அவரது கருத்து வருத்தம் அளிக்கிறது. அவரது செயல் அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமைக்கு தேவையின்றி ஊறு விளைவிப்பதாக உள்ளது. இது சரியல்ல. அவர் கோடிக்கணக்கான கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். இதற்காக அவர், கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்பதால் யாரும் சிறுமை ஆக மாட்டார்கள். மன்னிப்பு கேட்காமல் பிடிவாதம் பிடிப்பதால் யாரும் பெரிய ஆள் ஆகிவிட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.