கராச்சி,
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று முன் தினம் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில்16 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக கராச்சியின் மாலிர் சிறையில் இருந்த கைதிகள் மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்வதற்காக விடுவிக்கப்பட்டனர்.
இதனை பயன்படுத்திக்கொண்ட கைதிகள் 200க்கும் மேற்பட்டோர் சிறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்;
“சம்பவம் நடந்த நேரத்தில் மாலிர் சிறையில் 6,000 க்கும் மேற்பட்ட கைதிகள் இருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ஈடுபட்டவர்கள். நிலநடுக்கத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 600க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கள் முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது சிறையில் இருந்து 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றனர். அவர்களில் 80க்கும் மேற்பட்ட கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். 135க்கும் மேற்பட்ட கைதிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” என்று தெரிவித்தார்.