தீவிரவாதம் எனும் நச்சுபாம்பை நசுக்குவோம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

பாட்னா: தீவிரவாதம் எனும் நச்சுப் பாம்பு மீண்டும் தனது தலையை தூக்க முயன்றால், துளையிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு நசுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிஹார் மாநிலம் கராகத் நகரில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: இந்தியப் பெண்கள் அணியும் குங்குமத்தின் சக்தியை பாகிஸ்தானும் இந்த உலகமும் பார்த்தன. பாகிஸ்தான் ராணுவப் பாதுகாப்பில் இருந்த தீவிரவாதிகளை நாம் மண்டியிட வைத்தோம். பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களின் மறைவிடங்களை இந்திய ஆயுதப் படைகள் தகர்த்தெறிந்தன.

பாகிஸ்தான் விமானப்படை தளங்கள், ராணுவ அமைப்புகளையும் நாம் அழித்தோம். இது புதிய இந்தியா. இதன் சக்தி அனைவரும் காணக்கூடியதாக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நமது அம்பறாத்தூணியில் இருந்து வீசப்பட்ட ஓர் அம்பு மட்டுமே. தீவிரவாதத்திற்கு எதிரான போர் முடிவடையவில்லை. நிறுத்தப்படவும் இல்லை. தீவிரவாதம் எனும் நச்சுப் பாம்பு மீண்டும் தனது தலையை தூக்க முயன்றால், துளையிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு நசுக்கப்படும்.

2014-ல் என்டிஏ ஆட்சிக்கு வந்த பிறகு மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 125-ல் இருந்து 18 ஆக குறைந்துள்ளது. மாவோயிஸம் வேரறுக்கப்பட்டு, அனைத்து கிராமங்களுக்கும் அமைதி, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் கல்வி சென்றடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பிஹார் மக்களின் துன்பங்கள் பற்றி காங்கிரஸும் ஆர்ஜேடியும் ஒருபோதும் கவலைப்படவில்லை. இங்குள்ள வறுமையை பார்க்க விரும்பிய வெளிநாட்டினருக்கு அவர்கள் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தனர். இப்போது அவர்கள் தங்களின் பாவங்களால் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நம்பிக்கையை இழந்துவிட்டதால் சமூக நீதி அரசியலை கையில் எடுத்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.