புதுடெல்லி: நோயாளிகளின் நலன்களைக் காக்கவும், நெறிமுறைகள் சார்ந்த தரத்தை கடைபிடிக்கவும், மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை மருத்துவப் பிரதிநிதிகள் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நடத்தும் அனைத்து மருத்துவனைகளிலும், மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவமனை பிரதிநிகள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து டிஜிஹெச்எஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், “இந்த உத்தரவு, மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவப் பிரதிநிதிகளை அனுமதிக்கக் கூடாது என்ற முந்தைய உத்தரவு தொடர்பானது. இதன்படி, மருத்துவமனை வளாகத்துக்குள், மருத்துவப் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்படுகிறது.
மருத்துவமனையின் தலைவர்கள், இதுகுறித்த தேவையான கடுமையான வழிகாடுதல்களை தங்களின் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இயக்குனரகத்துக்கு தெரிவிக்கலாம். மருத்துவமனைகளுக்குள் இருக்கும் மருத்துவர்களை, மருத்துவப் பிரதிநிதிகளின் நிறுவனங்களால் முன்னிறுத்தப்படும் மருத்துகளை பரிந்துரைப்பதில் தேவையற்ற செல்வாக்கினைத் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று தெரித்துள்ளது.
மேலும், எந்த ஒரு சிகிச்சை பற்றிய விசாரணை அல்லது நடைமுறையின் புதிய முன்னேற்றங்கள் குறித்து மின்னஞ்சல் அல்லது பிற டிஜிட்டல் ஊடகம் வழியாக பகிர்ந்து கொள்ள மருத்துவப் பிரதிநிதிகளிடம் கேட்கலாம் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.