மதுரை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இருபோக பாசனத்துக்கு கால தாமதமின்றி தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரையில் இன்று நடந்த விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
மதுரை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான, விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் பென்னிகுயிக் அரங்கில் நடைபெற்றது. இதற்கு பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் பாரதி தாசன் தலைமை வகித்தார். மேலூர் பிரிவு உதவி செயற் பொறியாளர் சிவபிரபாகரன், உதவி பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை மூலம் இரு போக பாசன விவசாயத்துக்கு பேரணை முதல் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தொடர்பாக நடந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் பாசன வசதி பெறும் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மதுரை மேற்கு, கிழக்கு, திண்டுக்கல் மாவட்ட பேரணை பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் விவரம்:
குலமங்கலம் விவசாயி திருப்பதி: முல்லை பெரியாறு அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்குரிய தண்ணீரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக திறக்க வேண்டும். அப்போது தான் 120 நாட்களில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடை செய்ய முடியும். காலம் தாழ்த்தினால் விளையும் நெற்பயிர் வடகிழக்குப் பருவ மழையால் விளைச்சல் பாதிக்கும்.
கடந்த காலங்களில் வழக்கம் போல் ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட்டு விடும். தற்போது ஜூன் 3-ம் தேதியாகியும் திறக்கவில்லை. எனவே காலம் தாழ்த்தாமல் தண்ணீர் திறக்க வேண்டும். மேலும் தலைமை செயற் பொறியாளர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும்.
திண்டுக்கல் விவசாயி ராஜேந்திரன்: கடந்தாண்டு ஜூனில் திறக்க வேண்டிய தண்ணீரை ஒருமாதத்துக்கு பிறகு ஜூலையில் திறந்ததால் மகசூல் பாதித்தது. அதற்கடுத்து வரும் வடகிழக்குப் பருவ மழையால் மகசூலும் பாதித்தது. எனவே காலதாமதமின்றி விரைந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடிப்பட்டி விவசாயிகள்: அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டியில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. பால வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், மதுரை ஆட்சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக விவசாயிகள் கேட்டுக் கொண்டதால் தனியாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி நேற்று கூட்டம் நடந்தது. இதில் கருத்துகளை கேட்க வேண்டிய கோட்ட செயற் பொறியாளர் பாரதி தாசன் தாமதமாகத்தான் வந்தார்.
பின்னர் அமைச்சர் தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்பதால் விரைந்து கருத்துகளை சொல்லுங்கள் என அரைமணி நேரத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு சென்றார். கண் துடைப்பாக கூட்டம் நடத்துவதை விட்டு விட்டு இனியாவது விவசாயிகள் நலனில் அக்கறையுடன் கூட்டம் நடத்த வேண்டும் என்றனர்.