வாணியம்பாடியில் 8 பேர் உயிரிழந்த விவகாரம்: தனியார் பல் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பல் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் அறிவரசன் என்பவர் பல் மருத்துவமனையை நடத்தி வந்தார். இந்த மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு பல் வலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அடுத்த 6 மாதங்களில் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில், கடைசியாக உயிரிழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த இந்திராணி என்பவரின் மகன் ஸ்ரீராம்குமார் என்பவர் தனது தாயார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தனியார் பல் மருத்துவமனையில் தன் தாயாருடன் சிகிச்சை பெற்று வந்த 8 பேரும் உயிரிழந்ததால் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை, காவல் துறையினருக்கு புகார் அளித்தார்.

ஆனால், அந்த புகார் மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை மற்றும் வேலூர் தனியார் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் நடத்திய ஆய்வில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 8 பேரும் தொற்று காரணமாக உயிரிழந்தனர் என ஆய்வறிக்கை ஒன்றை சமர்பித்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஞானமீனாட்சி தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சம்மந்தப்பட்ட தனியார் பல் மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார்.

இது தொடர்பான தனது அறிக்கையை மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லிக்கும், தமிழக சுகாதாரத்துறை இயக்குநரகத்துக்கு அவர் அனுப்பி வைத்தார். மேலும், 8 பேர் உயிரிழந்தது குறித்து பல் மருத்துவர் அறிவரசன் விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் வழங்கினார். இந்நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஞானமீனாட்சி, வாணியம்பாடி வட்டாட்சியர் உமாரம்யா, சுகாதாரத்துறை அதிகாரிகள், வாணியம்பாடி நகர காவல் துறையினர் பாதுகாப்புடன் வாணியம்பாடி கச்சேரி சாலைக்கு இன்று (ஜூன் 3) வந்து, அறிவரசன் நடத்தி வந்த பல் மருத்துவமனையை இழுத்து மூடி ‘சீல்’ வைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஞானமீனாட்சி கூறுகையில், “8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பல் மருத்துவமனை மருத்துவர் அறிவரசனிடம் விளக்கம் கேட்டு 2 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த நோட்டீஸ் மீது அவர் வழங்கிய பதில் ஏற்புடையதாக இல்லை. இதனால் சுகாதாரத்துறை சார்பில் அவர் நடத்தி வந்த பல் மருத்துவமனைக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பல் மருத்துவர் அறிவரசன் மீது மேல் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.