இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே கமிட்டாகியிருந்தார். ஆனால், அதன் பிறகு அவர் படத்திலிருந்து விலகினார்.

அவருக்கு பதிலாக நடிகை த்ரிப்தி டிம்ரி படத்தில் நடிக்கவந்திருக்கிறார்.
தீபிகா படுகோனே சந்தீப் ரெட்டி வங்காவின் இத்திரைப்படத்திலிருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து பலவற்றைக் கூறப்பட்டது.
அதில், தீபிகா படுகோனே தன்னுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்கிற காரணத்தினால் ஒரு நாளைக்கு 8 மணி நேரமாக தனது பணி நேரத்தைக் குறைத்துக்கொள்ள கோரிக்கை வைத்திருக்கிறார், இந்த பணி நேரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீபிகா படுகோனே நினைத்தபடி நடக்காததால்தான் அவர் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து விலகினார் என்று கூறப்பட்டது.
‘தக் லைஃப்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது மணி ரத்னத்திடம், “தீபிகா படுகோனே சினிமாவில் தன்னுடைய பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைத்துக்கொள்ளக் கேட்பது சரியானதா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

தீபிகா படுகோனேவுக்கு ஆதரவாகவே அவர் பதில் அளித்திருக்கிறார். இந்தக் கேள்விக்கு மணி ரத்னம், “அது ஒரு நியாயமான கோரிக்கை என்று நான் நினைக்கிறேன். அதைக் கேட்கும் நிலையில் அவர் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு திரைப்பட இயக்குநராக இந்த விஷயத்தைக் கருத்தில் கொள்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன். அவர் கேட்பது நியாயமற்ற விஷயமல்ல.
தீபிகா படுகோனின் கோரிக்கை அதே நிலைமையில் இருக்கும் பலருக்கும் கதவுகளை திறந்து வைக்கும். இது ஒரு முழுமையான அடிப்படைத் தேவை. அதுதான் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும், அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.