"ஆர்சிபி இல்லை.. பஞ்சாப் அணிதான் வெல்லும்" – யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங்!

2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. நேற்று முன்தினம் (ஜூன் 01) குவாலிஃபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேபோல் பல முன்னாள் வீரர்களும் ஆர்சிபி அணியே கோப்பையை வெல்லும் என கணித்து வருகின்றனர். இந்த நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இப்போட்டியில் எந்த அணி வெல்லும் என கணித்துள்ளார். 

இது தொடர்பாக யோக்ராஜ் சிங் பேசுகையில், பஞ்சாப் கிங்ஸ் அணி விராட் கோலியை அவுட் ஆக்கவில்லை என்றால் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். விராட் கோலி ஆட்டமிழக்கவில்லை என்றால், அவர் 250, 300 ரன்களை கூட சேஸிங் செய்வார். ஆனால் நான் பஞ்சாப் அணிதான் வெற்றி பெறும் என நினைக்கிறேன். 

விராட் கோலி 10 ஓவருக்குள் ஆட்டமிழந்துவிட்டால், இறுதி போட்டி அவ்வளவுதான். பஞ்சாப் அணியே வெற்றி பெறும். எனது உள்ளுணர்வு அப்படிதான் சொல்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி அற்புதமான கேப்டனை வைத்துள்ளது. அவர் அருமையான வீரர். இப்போட்டி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் விராட் கோலிக்கும் இடையிலானது. 

ஆர்சிபிக்கு விராட் கோலி என்றால், பஞ்சாப் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர். எந்த ஒரு சூழ்நிலையிலும் விராட் கோலியால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என்றால், அதேபோல் தான் ஸ்ரேயாஸ் ஐயரும். அவராலும் அதனை செய்ய முடியும் என யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் கூறினார். 

பல முன்னாள் வீரர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் இறுதி போட்டியில் வெல்லும் என கூறும் நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் என கூறியுள்ளது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், பஞ்சாப் கிங்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றில் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளதால், அந்த அணி மீதும் பலருக்கு நம்பிக்கை உள்ளது. எது எப்படியாக இருந்தாலும், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி.  

மேலும் படிங்க: அதிர்ச்சியில் RCB! இந்த வீரர் பைனலில் விளையாட மாட்டார்? – டிம் டேவிட்டும் சந்தேகம்

மேலும் படிங்க: மழையால் இறுதிப்போட்டி ரத்தானால்… ஆர்சிபிக்கு கோப்பை கிடையாது – ஏன் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.