RCB: "இது சாதாரண ஜெர்ஸி அல்ல; மில்லியன் கணக்கானவர்கள் காத்திருக்கிறார்கள்" – துணை முதல்வர் நம்பிக்கை

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் தங்களின் முதல் ஐ.பி.எல் கோப்பையை கையிலேந்த அகமதாபாத்தில் இன்று முதல்முறையாக நேருக்கு நேர் இறுதிப்போட்டியில் மோதவிருக்கின்றன.

இரண்டு அணிகளுமே முதல் சீசன் முதல் ஆடி வந்தாலும் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாததால், எந்த அணி கோப்பை வென்றாலும் ஓகேதான் என்ற மனநிலையில் பெரும்பாலான ஐபிஎல் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இருப்பினும், கோலிக்காக இந்த கோப்பையை ஆர்.சி.பி வெல்ல வேண்டும் என்ற ஆசை பலருக்கும் சற்று கூடுதலாக இருக்கிறது.

RCB vs PBKS - IPL 2025 FINAL
RCB vs PBKS – IPL 2025 FINAL

இந்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ஈ சாலா கப் நமதே. 18 வருட மன உறுதி. ஒவ்வொரு பிரார்த்தனையும், கொண்டாட்டமும் இந்த நாளுக்கு அழைத்துச் செல்கின்றன.

இது நம்முடைய நேரம், நம்முடைய கோப்பை. ஆர்.சி.பி-க்கு வாழ்த்துகள். கர்நாடகா உங்களுடன் நிற்கிறது.” என்று பதிவிட்டு வீடியோ ஒன்றும் ஷேர் செய்திருக்கிறார்.

அந்த வீடியோவில் டி.கே. சிவகுமார், “கடந்த 18 வருடங்களாக ஒரு சிறந்த நாளுக்காகக் காத்திருக்கிறோம். 18 வருட உறுதியான அர்ப்பணிப்பு. இப்போது அந்தத் தருணம் வந்துவிட்டது.

இது வெறும் சாதாரண ஜெர்ஸி அல்ல, மில்லியன் கணக்கானவர்களின் கனவு. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.

கர்நாடகா உங்களுடன் நிற்கிறது. சென்று கோப்பையைக் கொண்டு வாருங்கள் பாய்ஸ்.

லட்சக் கணக்கான மக்கள் கோப்பைக்காகக் காத்திருக்கின்றனர். கொண்டுவருவார்கள் என்று நம்புகிறோம். ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்தினார்.

இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லப்போவது பெங்களூரு அணியா, பஞ்சாப் அணியா என்பது குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.