ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது.
ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது.

ரஜத் படித்தார் பேசும்போது, “இந்த வெற்றி விராட் கோலிக்கும் எங்களை இத்தனை ஆண்டுகளாக ஆதரித்த ரசிகர்களுக்கும் ஸ்பெசலான தருணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
அவர்கள் இந்த வெற்றிக்கு உரித்தானவர்கள். குவாலிபையர் 1 போட்டியில் வென்றவுடன்தான் எங்களால் இந்த கோப்பையை வெல்ல முடியும் என நம்பினேன்.
இந்த பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தது. அதனால் 190 ரன்கள் போதுமானதாக இருக்கும் என்றே நினைத்தேன். எங்களின் பௌலர்களும் திட்டங்களை சரியாக செயல்படுத்தினார்கள்.
ஆட்டத்தில் எப்போதெல்லாம் அழுத்தம் ஏறுகிறது என நினைக்கிறேனோ அப்போதெல்லாம் க்ரூணால் பாண்ட்யாவைத்தான் பார்ப்பேன். சுயாஷ் சர்மாவும் சீசன் முழுக்க நன்றாக வீசியிருக்கிறார்.
புவனேஷ்வர், ஹேசல்வுட், யாஷ் தயாள் என வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள்.

ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய அந்த 2-3 ஓவர்களும் கூட ஸ்பெஷலானதாகத்தான் இருந்தது. கோலியின் கீழ் ஒரு கேப்டனாக செயல்பட்டதில் பெரும் மகிழ்ச்சி.
நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எல்லாரையும் விட கோலிதான் இந்த வெற்றிக்கு உரித்தானவர். ரசிகர்களுக்காக ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ஈ சாலா கப் நமது.’ என்றார்.