“அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசு போக்குவரத்து கழகம் என்றுதான் பெயர் இருந்தது” – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அரியலூர்: அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசு போக்குவரத்து கழகம் என்றுதான் பெயர் இருந்தது என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் செய்தியாளர்களிடம் இன்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியது: “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்துகளில் அரசு போக்குவரத்துக் கழகம் என பெயர் உள்ளது. தமிழ்நாடு என்ற பெயரை காணவில்லை என ஒரு சர்ச்சை சமீபத்தில் எழுந்துள்ளது. 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேருந்துகளை தொடங்கி வைத்தபோதே அரசு போக்குவரத்துக்கழகம் என்றுதான் உள்ளது.

ஏனெனில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் என எழுதினால் நீண்ட பெயராக இருப்பதால், பேருந்தின் முன் பகுதியில் எழுதினால் படிக்க வசதியாக இருக்காது என அதிமுக ஆட்சியின் போது மாற்றப்பட்டது. 13 வருடங்களுக்கு பிறகு புதிய செய்தி போல இவ்வாறு சிலர் தேவையற்ற சர்ச்சைகளை செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் பேருந்துகள் பழமையாக உள்ளது என்றனர். இதையடுத்து தமிழக முதல்வர் புதிய பேருந்துகளை வாங்கி பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இன்னும் புதிய பேருந்துகள் வரவுள்ளன.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட இடங்களில் தற்போது மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எதை குற்றம் சொல்வது என தெரியாமல் இந்த பிரச்சினையை உருவாக்கி உள்ளனர். உதாரணத்துக்கு மெட்ராஸ் மாகாணம் என இருந்ததை இந்த மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணாவின் பிள்ளைகள் நாங்கள்.

எனவே, இவர்கள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். இது அதிமுக ஆட்சியில் நடந்தது. ஒரு ஆட்சியில் நடந்ததை அடுத்த ஆட்சியில் மாற்றுகின்றனர் என குற்றச்சாட்டை கொண்டு வருவதால் அதனை அப்படியே கொண்டு செல்லவேண்டியுள்ளது. மேலும், போக்குவரத்து கழகத்தில் பணிபுரிபவர்கள் இது உதவிகரமாக, வசதியாக இருப்பதாக தெரிவிப்பதால் இது அப்படியே உள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். கடந்த காலத்தில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இந்த ஓராண்டில் ஒரு லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். காரணம், அரசு போக்குவரத்து கழகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தனியார் பேருந்தில் முன்பதிவு செய்து பயணித்தவர்கள், தற்போது அரசு பேருந்தில் பயணம் செய்கின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.