சென்னை: “கர்நாடக அரசும், ஆர்சிபி அணி நிர்வாகமும் தான் பெங்களுரூ கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றதைக் கொண்டாடும் வகையில், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பெங்களூர் அணி 18 ஆண்டுகளில் முதன் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களிடம் ஏற்பட்ட அளவு கடந்த உற்சாகத்தை நேற்று இரவே அறிய முடிந்தது. அதன்பின் 12 மணி நேர அவகாசத்தில் வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அளவு கடந்த கூட்டம் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தவறிய கர்நாடக அரசும், ஆர்சிபி அணி நிர்வாகமும் தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வரும் நிலையில் அவர்களின் உயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.