கரூர் மாவட்டம், புகளூர் நடுநானப்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியன்(வயது 60). இவரது மகன் மனோஜ் பிரபாகர். இவர், பி.எஸ்.சி வேளாண் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டிலிருந்து வந்தார்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியனின் நண்பர் சென்னை மயிலாப்பூர் லாஸ் அவென்யூ முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த ராஜ் அருண் (வயது: 70). இவர் சினிமா சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அவரிடம் பாலசுப்ரமணியன் தனது மகன் படித்துவிட்டு வீட்டில் இருப்பதாகவும், அவருக்கு ஒரு வேலை வாங்கித் தருமாறும் கேட்டுள்ளார்.

அப்போது, தனது மகன் கனடாவில் வசித்து வருவதாகவும், உங்களது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பிய பாலசுப்பிரமணியன், ராஜ் அருண் கேட்டுக்கொண்டபடி அவரிடம் 5.70 வரை லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
அதை வாங்கிக் கொண்ட ராஜ் அருண், மனோஜ் பிரபாகருக்கு வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். பலமுறை பாலசுப்பிரமணியன் ராஜ் அருணிடம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், ராஜ் அருண் வேலையும் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதனால் அதிர்ச்சடைந்த பாலசுப்ரமணியன் பலமுறை ராஜ் அருணிடம் பணம் கேட்டும் கொடுக்காததால் பாலசுப்பிரமணியன் நேரடியாக சென்னைக்குச் சென்று ராஜ் அருணை நேரில் சந்தித்து பணத்தைக் கேட்டபோது, ராஜ் அருண் கோபமடைந்து பாலசுப்ரமணியனைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து, பாலசுப்ரமணியன் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் இரு தரப்பினரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து இருந்தார்.
ஆனால், ராஜ் அருண் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வர மறுத்துவிட்டார். அதன் அடிப்படையில், ராஜ் அருண் மீது ரூ5.70 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் குறிப்பிட்ட இடத்தில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீஸார் ராஜ் அருணைக் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் ராஜ் அருணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பிறகு, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அங்குள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.